சென்னை மணலியில் கன்டெய்னர்களில் வைக்கப்பட்டுள்ள அமோனியம் நைட்ரேட் - ஏலத்தில் எடுத்த ஐதராபாத் நிறுவனம்


சென்னை மணலியில் கன்டெய்னர்களில் வைக்கப்பட்டுள்ள அமோனியம் நைட்ரேட் - ஏலத்தில் எடுத்த ஐதராபாத் நிறுவனம்
x
தினத்தந்தி 9 Aug 2020 7:53 AM GMT (Updated: 9 Aug 2020 7:53 AM GMT)

சென்னை மணலியில் இருந்து அமோனியம் நைட்ரேட் வைக்கப்பட்டுள்ள 10 கன்டெய்னர்கள், ஐதராபாத்திற்கு அனுப்பப்பட உள்ளன.

சென்னை,

சென்னை மணலியில் உள்ள வேதி கிடங்கில் தற்போது 37 கன்டெய்னர்களில் 740 டன் அமோனியம் நைட்ரேட் வைக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ருட்டில், கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டிருந்த அமோனியம் நைட்ரேட் எதிர்பாராத விதமாக வெடித்துச் சிதறியதில், அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் முற்றிலும் சிதைவடைந்தது. இந்த சம்பவத்தில் பல உயிர்சேதங்கள் ஏற்பட்ட நிலையில் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சென்னை மணலியில் வைக்கப்பட்டுள்ள அமோனியம் நைட்ரேட்டை அப்புறப்படுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். இந்த அம்மோனியம் நைட்ரேட் தென் கொரியாவில் இருந்து கரூரைச் சேர்ந்த அம்மன் கெமிக்கல்ஸ் என்ற நிறுவனம் 2015 ஆம் ஆண்டு உரிய ஆவணங்கள் இன்றி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. அதனை கைப்பற்றிய சுங்கத்துறை அதிகாரிகள் மணலில் உள்ள சுங்கத்துறை சேமிப்பு கிடங்கில் பாதுகாத்து வைத்துள்ளனர்.

இது தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 2019 நவம்பர் மாதம் அளித்த தீர்ப்பில் அம்மோனியம் நைட்ரேட் முழுவதையும் மின்னணு ஏலத்தில் விட சுங்கத்துறை அறிவுறுத்தியது. இதன் அடிப்படையில் கிடங்கில் வைக்கப்பட்டுள்ள அமோனியம் நைட்ரேட் தற்போது ஐதராபாத் நிறுவனத்திற்கு ஏலத்தில் விடப்பட்டுள்ளது. இதனையடுத்து அமோனியம் நைட்ரேட் வைக்கப்பட்டுள்ள 10 கன்டெய்னர்களும், வேதி கிடங்கு அதிகாரிகள் முன்னிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஐதராபாத் அனுப்பி வைக்கப்பட உள்ளது.

Next Story