தமிழகத்தில் பெய்து வரும் மழை: உயர்ந்து வரும் அணைகளின் நீர்மட்டம்


தமிழகத்தில் பெய்து வரும் மழை: உயர்ந்து வரும் அணைகளின் நீர்மட்டம்
x
தினத்தந்தி 9 Aug 2020 1:32 PM GMT (Updated: 9 Aug 2020 1:32 PM GMT)

தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தமிழகத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

சென்னை,

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக கடந்த சில நாட்களாக கேரள, கர்நாடகா மாநிலத்திலும், தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களிலும் தொடர் மழை பெய்து வருகிறது. மேலும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது.

இதனால் தமிழகத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. மேலும் ஒரு சில அணைகளில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணிர் அளவானது அதிகமாக உள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம்:-

மேட்டூர் அணை

கர்நாடக அணைகளில் இருந்து கூடுதல் நீர் திறக்கப்பட்டதால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 1 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது.  அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் ஐந்து அடி உயர்ந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 76 அடியாக உள்ளது. ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

முல்லைப்பெரியாறு அணை

முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 135 புள்ளி 25 அடியான உயர்ந்ததுள்ளது. அணையிலிருந்து தமிழகத்திற்கு இரண்டாயிரத்து 10  கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு ஐயாயிரத்து 474 கன அடியாகவும், அணையின் இருப்பு நீர் ஐயாயிரத்து 929 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. வைகையின் நீர்மட்டம் 36 புள்ளி 91 அடியாகவும், சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 77 புள்ளி 90 அடியாகவும், மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 35 புள்ளி 70 அடியாகவும் உள்ளது.

பவானிசாகர் அணை 

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியதால் பாசனப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்று காலை நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து 7 ஆயிரத்து 617 கன அடியாக உள்ளது. அணையில் நீர் இருப்பு 28 புள்ளி 3 டிஎம்சி ஆகவும் அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் ஆயிரத்து 100 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

ராம நதி அணை 

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக தென்காசி மாவட்டம் ராம நதி அணை முழு கொள்ளளவை எட்டியது. அணைக்கு வினாடிக்கு 207 கன அடி நீர் வந்துகொண்டிருக்கும் நிலையில்,  அணையில் இருந்து 47 கன அடி நீர் வெளியேற்றபட்டு வருகிறது. 

84 கன அடியை முழு கொள்ளளவாக கொண்ட ராம நதி அணையில் 82 அடி நீர் இருப்பு மட்டும் வைத்துவிட்டு, அணைக்கு வரும் நீர் அதிகளவில் வெளியேற்றபட்டு வருவதால் தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

சோத்துப்பாறை அணை

தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது, இதனால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன., சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 3 நாட்களில் 3 அடி உயர்ந்து 77 அடியை தொட்டுள்ளது,. தொடர்மழையால் நடப்பு பருவத்தில் அதிக மகசூல் கிடைக்கும் என்று விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்

கும்பக்கரை அருவி

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த தொடர் மழையால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.மேலும் அருவியில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால் அருவிக்கு கீழ் உள்ள குளங்களுக்கு நீர் வரத்து தொடங்கி, குளங்களில் நீர் நிரம்பி வருவதால்  விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story