ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் செல்லுபடியாகும் காலத்தை ஆயுட்காலமாக நீட்டிக்க வேண்டும் - சரத்குமார் வேண்டுகோள்
ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் செல்லுபடியாகும் காலத்தை ஆயுட்காலமாக நீட்டிக்க வேண்டும் என்று சரத்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை,
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
2013-ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிபெற்ற 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தற்போது வரை பணி நியமனம் பெறாமல் அவர்களுடைய வாழ்வாதாரத்தை இழந்துதவித்து வரும் சூழல் மிகுந்த வேதனை அளிக்கிறது. அரசின் நிதி நிலைமையை கருதி, தொகுப்பூதியத்தின் அடிப்படையில் பணியில் ஈடுபட தயாராக உள்ள ஆசிரியர்களை பயன்படுத்தி படிப்படியாக அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கவேண்டும்.
மேலும் ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் செல்லுபடியாகும் காலத்தை ஆயுட்கால சான்றிதழாக நீட்டித்தும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் நீண்டகால காத்திருப்பிற்கு பலனை அளிக்கும் வகையில் அவர்கள் எதிர்கால வாழ்க்கை நலன் சார்ந்த முடிவினை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உயர் அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து விரைவில் அறிவிக்கவேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story