அ.தி.மு.க.வில் அடுத்த முதல்-அமைச்சர் யார்? - அமைச்சர்கள் செல்லூர் ராஜூ- ராஜேந்திர பாலாஜி இடையே கருத்து மோதல்


அ.தி.மு.க.வில் அடுத்த முதல்-அமைச்சர் யார்? - அமைச்சர்கள் செல்லூர் ராஜூ- ராஜேந்திர பாலாஜி இடையே கருத்து மோதல்
x
தினத்தந்தி 11 Aug 2020 11:15 PM GMT (Updated: 11 Aug 2020 9:13 PM GMT)

அ.தி.மு.க.வில் அடுத்த முதல்-அமைச்சர் யார்? என்பதில் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ - கே.டி.ராஜேந்திர பாலாஜி இடையே கருத்து மோதல் ஏற்பட்டு உள்ளது.

சென்னை, 

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான ஆயத்தப்பணிகளில் அரசியல் கட்சியினர் முனைப்பு காட்ட தொடங்கி உள்ளனர். இந்தநிலையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் நேற்றுமுன்தினம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது, ‘தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றால், எம்.எல்.ஏ.க்கள் ஒன்றுகூடியே முதல்- அமைச்சரை தேர்வு செய்வோம். அ.தி.மு.க. கொள்கையின்படி எம்.எல்.ஏ.க்கள் ஒன்றுக் கூடி யாரை முதல்-அமைச்சராக அறிவிக்கிறார்களோ, சொல்கிறார்களோ, அவர்தான் முதல்-அமைச்சர். இதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது’ என்று பரபரப்பான கருத்துகளை தெரிவித்தார்.

அவருடைய இந்த கருத்து அ.தி.மு.க.வில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தநிலையில் அமைச்சர் செல்லூர் ராஜூவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் நேற்று பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில் அவர், ‘ எடப்பாடியார் (எடப்பாடி பழனிசாமி) என்றும் முதல்வர். இலக்கை நிர்ணயித்துவிட்டு களத்தை சந்திப்போம். எடப்பாடியாரை முன்னிறுத்தி தளம் அமைப்போம். களம் காண்போம். வெற்றி கொள்வோம். 2021-ம் நமதே...’ என்று கருத்து தெரிவித்து உள்ளார்.

இதுதொடர்பாக அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மேலும் கூறியதாவது:-

முடிவு எடுத்துவிட்டு இலக்கை நோக்கி பயணித்தால் தான் வெற்றி இலகுவாக கிடைக்கும். பயணம் செய்துவிட்டு முடிவை பின்னால் எடுப்போம் என்று சொன்னால், அது பிரச்சினைக்கும், குதிரை பேரத்துக்கும் தான் வழிவகுக்கும்.

இந்தநிலை மாற வேண்டும் என்று சொன்னால், முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் வெளிப்படைத் தன்மையாக பேசி நல்ல முடிவை அறிவிக்க வேண்டும். ஏழை-எளிய மக்கள் ஏற்றுக் கொள்ள கூடிய தலைவராக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். எனவே யார் முதல்-அமைச்சராக வர வேண்டும் என்பதை மக்கள் முடிவு எடுத்து விட்டார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story