எடப்பாடி பழனிசாமி தலைமையிலும், ஓபிஎஸ் வழிகாட்டல் படியும் அதிமுக செயல்படும் ; ஆர்.பி உதயகுமார்


எடப்பாடி பழனிசாமி தலைமையிலும், ஓபிஎஸ் வழிகாட்டல் படியும் அதிமுக செயல்படும் ;  ஆர்.பி உதயகுமார்
x
தினத்தந்தி 12 Aug 2020 5:11 AM GMT (Updated: 12 Aug 2020 5:11 AM GMT)

எடப்பாடி பழனிசாமி தலைமையிலும், ஓபிஎஸ் வழிகாட்டல் படியும் அதிமுக செயல்படும் என்று வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்தார்.

மதுரை, 

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான ஆயத்தப்பணிகளில் அரசியல் கட்சியினர் முனைப்பு காட்ட தொடங்கி உள்ளனர். இந்தநிலையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் நேற்றுமுன்தினம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது, ‘தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றால், எம்.எல்.ஏ.க்கள் ஒன்றுகூடியே முதல்- அமைச்சரை தேர்வு செய்வோம். அ.தி.மு.க. கொள்கையின்படி எம்.எல்.ஏ.க்கள் ஒன்றுக் கூடி யாரை முதல்-அமைச்சராக அறிவிக்கிறார்களோ, சொல்கிறார்களோ, அவர்தான் முதல்-அமைச்சர். இதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது’ என்று பரபரப்பான கருத்துகளை தெரிவித்தார்.

இந்தநிலையில் அமைச்சர் செல்லூர் ராஜூவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் நேற்று பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில் அவர், ‘ எடப்பாடியார் (எடப்பாடி பழனிசாமி) என்றும் முதல்வர். இலக்கை நிர்ணயித்துவிட்டு களத்தை சந்திப்போம். எடப்பாடியாரை முன்னிறுத்தி தளம் அமைப்போம். களம் காண்போம். வெற்றி கொள்வோம். 2021-ம் நமதே...’ என்று கருத்து தெரிவித்து உள்ளார். இருவரின் மாறுபட்ட கருத்துக்கள் அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த நிலையில், இன்று மதுரையில்  வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையின் கீழும் ஓ பன்னீர் செல்வம் வழிகாட்டல் படியும் அதிமுக செயல்படும். அதிமுகவினர் ஒற்றுமையுடன் இருப்பதாலேயே மக்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளது.  முதல்வரை முன்னிறுத்திதான் சட்ட மன்ற தேர்தலை சந்திக்க வேண்டும்” என்றார். 

Next Story