“மாற்றத்திற்கான விதை இளைஞர்கள் தான்” - கமல்ஹாசனின் இளைஞர் தின வாழ்த்து


“மாற்றத்திற்கான விதை இளைஞர்கள் தான்” - கமல்ஹாசனின் இளைஞர் தின வாழ்த்து
x
தினத்தந்தி 12 Aug 2020 7:23 AM GMT (Updated: 12 Aug 2020 7:23 AM GMT)

இன்று சர்வதேச இளைஞர் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, மாற்றத்திற்கான விதை இளைஞர்கள் தான் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சர்வதேச இளைஞர் தினம் ஆண்டுதோறும் ஆகஸ்டு 12 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. கடந்த 1999 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய நாடுகள் சபை ஆகஸ்டு 12 ஆம் தேதியை உலக இளைஞர் தினமாக அறிவித்தது. உலகம் முழுவதும் உள்ள இளைஞர்களின் ஆற்றலை ஒருங்கிணைத்து சர்வதேச தளத்தில் பயன்படுத்தும் முனைப்பை ஏற்படுத்துவதே இளைஞர் தினத்தின் நோக்கமாக உள்ளது.

அதிலும் குறிப்பாக உலக அளவில் அதிக இளைஞர்களை கொண்டிருக்கும் நாடு இந்தியா ஆகும். இன்றைய நிலவரப்படி இந்திய இளைஞர்கள் சர்வதேச நாடுகளில் அறிவியல், தொழில்நுட்பம், மென்பொருள், விண்வெளி ஆய்வு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி பல்வேறு சாதனைகளை புரிந்து வருகின்றனர்.

இருப்பினும் இந்தியாவின் கிராமப்புறங்களிலும், சிறு நகரங்களிலும் உள்ள திறமை வாய்ந்த இளைஞர்களை கண்டறிந்து அவர்களை ஒருங்கிணைத்து முன்னேற்றும் திட்டங்களை அரசு செயல்படுத்த வேண்டும் என்பதே இளைஞர் தினத்தன்று அனைவரின் கோரிக்கையாகவும் உள்ளது.

இந்நிலையில் இளைஞர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “நாளையின் முன்னறிவிப்பாளர்கள், மூதறிஞர்கள், முன்னோடிகள், இளைஞர்கள் தான். அவர்களின் அறிவு,  பசியோடும், கேள்விகளோடும் திளைத்திருக்க இளைஞர் தின வாழ்த்துக்கள். மாற்றத்திற்கான விதை இளைஞர்கள் தான். நாளை நமதே” என்று தெரிவித்துள்ளார்.  

Next Story