இறுதி செமஸ்டர் தேர்வை ரத்து செய்ய வேண்டும் - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்


இறுதி செமஸ்டர் தேர்வை ரத்து செய்ய வேண்டும் - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 13 Aug 2020 8:50 AM GMT (Updated: 13 Aug 2020 8:50 AM GMT)

இறுதி செமஸ்டர் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை, 

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கான இறுதி செமஸ்டர் தேர்வுகளை செப்டம்பர் இறுதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று மத்திய அரசு ஆணையிட்டுள்ளது. 

நீட் தேர்வு செப்டம்பர் 13-ந் தேதியும், ஐ.ஐ.டி முதன்மை நுழைவுத்தேர்வுகள் செப்டம்பர் 1-ந் தேதி முதல் 6-ந் தேதி வரையும், ஐ.ஐ.டி. அட்வான்ஸ்டு நுழைவுத்தேர்வுகள் செப்டம்பர் 27-ந் தேதியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்குள் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வரும் என்று எந்த அடிப்படையில் மத்திய அரசு நம்புகிறது? இது மிகவும் ஆபத்தானது. மாணவர்களின் உயிருடன் அரசு விளையாடக்கூடாது.

கொரோனா வைரஸ் அச்சம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நடப்பாண்டில் எந்த தேர்வு நடத்தினாலும் அது வெற்றி பெறாது. அதுமட்டுமின்றி, மாணவர்களிடையேயும், அவர்கள் மூலமாக சமூகத்திலும் நோய் பரவுவதற்கே தேர்வு வழிவகுக்கும். எனவே நீட் உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகளை ரத்து செய்து விட்டு, 12-ம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும். இறுதி செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்து விட்டு, அனைவருக்கும் தேர்ச்சி அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story