சுதந்திர தின விழாவில், தேசிய கொடி ஏற்றுவதுடன் 150 அடி உயர கம்பத்தில் காங்கிரஸ் கொடி ஏற்றப்படும் - கே.எஸ்.அழகிரி அறிவிப்பு


சுதந்திர தின விழாவில், தேசிய கொடி ஏற்றுவதுடன் 150 அடி உயர கம்பத்தில் காங்கிரஸ் கொடி ஏற்றப்படும் - கே.எஸ்.அழகிரி அறிவிப்பு
x
தினத்தந்தி 14 Aug 2020 1:35 AM GMT (Updated: 14 Aug 2020 1:35 AM GMT)

சுதந்திர தின விழாவில், தேசிய கொடி ஏற்றுவதுடன் 150 அடி உயர கம்பத்தில் காங்கிரஸ் கொடி ஏற்றப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

சென்னை,

இந்தியாவின் 74-வது சுதந்திர தினத்தையும், சுதந்திரத்தை பெற்றுத்தந்த காந்தியின் 150-வது ஆண்டு பிறந்தநாள் விழாவையும் இணைத்து கொண்டாடுவது என முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

தமிழக காங்கிரஸ் வரலாற்றில் புதிய சாதனை படைக்கிற வகையில் சர்வதேச தொழில்நுட்பத்தின் அடிப்படையில் 150 அடி கொடி கம்பம் அமைக்கப்பட்டிருக்கிறது. அதில் ஏற்றப்படுகிற காங்கிரஸ் கொடியின் அளவு 45 அடி அகலம், 30 அடி உயரம் கொண்ட பிரமாண்டமானதாகும். உலகத்தில் எந்த அரசியல் கட்சி அலுவலகத்திலும் இவ்வளவு பெரிய கொடி அமைத்ததில்லை என்கிற கின்னஸ் சாதனையை இது படைக்க இருக்கிறது.

சத்தியமூர்த்தி பவனில் 15-ந்தேதி அன்று (நாளை) காலையில் நடைபெறுகிற சுதந்திர தினவிழாவில் தேசியக்கொடி மற்றும் 150 அடி உயர கம்பத்தில் காங்கிரஸ் கொடியேற்றுகிற நிகழ்ச்சி நடைபெற உள்ளது. காங்கிரஸ் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை படைக்கப்போகும் இந்த எழுச்சிமிகு விழாவிற்கு அனைவரையும் அன்போடு அழைக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story