மேலும் 125 பேர் உயிரிழப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்து 38 ஆயிரத்தை கடந்தது


மேலும் 125 பேர் உயிரிழப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்து 38 ஆயிரத்தை கடந்தது
x
தினத்தந்தி 16 Aug 2020 10:45 PM GMT (Updated: 16 Aug 2020 9:52 PM GMT)

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 லட்சத்து 38 ஆயிரத்தை கடந்தது. நேற்று ஒரேநாளில் 125 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னை,

தமிழகத்தில் நேற்றைய (ஞாயிற்றுக்கிழமை) கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று 68 ஆயிரத்து 444 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 3,585 ஆண்கள், 2,365 பெண்கள் என மொத்தம் 5,950 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டியலில், வெளிநாட்டில் இருந்து வந்த ஒருவரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 31 பேரும், 12 வயதுக்கு உட்பட்ட 270 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 816 முதியவர்களும் இடம்பெற்றுள்ளனர். நேற்று அனைத்து மாவட்டங்களிலும் புதிய தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 1,196 பேரும், திருவள்ளூரில் 488 பேரும், செங்கல்பட்டில் 436 பேரும், குறைந்தபட்சமாக தர்மபுரியில் 20 பேரும், திருப்பத்தூரில் 12 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் இதுவரை 35 லட்சத்து 81 ஆயிரத்து 939 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 3 லட்சத்து 38 ஆயிரத்து 55 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த பட்டியலில் 2 லட்சத்து 3 ஆயிரத்து 838 ஆண்களும், 1 லட்சத்து 34 ஆயிரத்து 188 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 29 பேரும் அடங்குவர். அதில் 12 வயதுக்கு உட்பட்ட 16 ஆயிரத்து 385 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 42 ஆயிரத்து 767 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர். தமிழகத்தில், பெரம்பலூரை தவிர்த்து மற்ற 36 மாவட்டங்களில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது.

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 86 பேரும், தனியார் மருத்துவமனையில் 39 பேரும் என 125 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர். இதில் சென்னையில் 22 பேரும், கோவையில் 14 பேரும், திருவள்ளூரில் 8 பேரும், நெல்லையில் 7 பேரும், மதுரை, புதுக்கோட்டையில் தலா 6 பேரும், சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், விருதுநகரில் தலா 5 பேரும், ஈரோடு, திருவண்ணாமலையில் தலா 4 பேரும், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, காஞ்சீபுரம், தூத்துக்குடி, திருப்பூரில் தலா 3 பேரும், விழுப்புரம், தென்காசி, ராணிப்பேட்டை, கடலூரில் தலா இருவரும், தர்மபுரி, கரூர், கிருஷ்ணகிரி, ராமநாதபுரம், திருப்பத்தூர், திருவாரூர், திருச்சி, வேலூரில் தலா ஒருவரும் என 30 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்து உள்ளது. இதுவரையில் தமிழகத்தில் 5,766 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 6 ஆயிரத்து 19 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 1,009 பேரும், செங்கல்பட்டில் 422 பேரும், விருதுநகரில் 379 பேரும் அடங்குவர். இதுவரையில் 2 லட்சத்து 78 ஆயிரத்து 270 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 54 ஆயிரத்து 19 பேர் உள்ளனர்.

தமிழகத்துக்கு வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானம் மூலம் வந்த 875 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து விமானம் மூலம் வந்த 748 பேரும், ரெயில் மூலம் வந்த 428 பேரும், சாலை மார்க்கமாக வந்த 3 ஆயிரத்து 891 பேரும், கடல் மார்க்கமாக வந்த 34 பேர் என மொத்தம் 5 ஆயிரத்து 976 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.




Next Story