எஸ்.பி பாலசுப்பிரமணியம் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடம்: மருத்துவமனை நிர்வாகம்


எஸ்.பி பாலசுப்பிரமணியம் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடம்: மருத்துவமனை நிர்வாகம்
x
தினத்தந்தி 20 Aug 2020 3:21 PM GMT (Updated: 20 Aug 2020 3:21 PM GMT)

எஸ்.பி பாலசுப்பிரமணியம் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருப்பதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழி படங்களில் ஆயிரக்கணக்கான பாடல் களை பாடியவர், எஸ்.பி.பாலசுப்பிரமணியம். அவருக்கு வயது 74. கடந்த 5-ந்தேதி கொரோனா தொற்று காரணமாக சென்னை சூளைமேட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். மறுநாள் அவருக்கு காய்ச்சல் குறைந்தது. “2 நாட்களில் முழுமையாக குணம் அடைந்து வீடு திரும்பி விடுவேன்” என்று அவர் கூறினார்.

இந்த நிலையில், கடந்த 13-ந்தேதி அவருடைய உடல்நிலை மோசம் அடைந்தது. அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். அவருக்கு உயிர் காக்கும் கருவிகள் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவருடைய உடல்நிலை கவலைக்கிடமானது. அவரது உடல்நிலையை தீவிர சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், எஸ்.பி பால சுப்பிரமணியம் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை எனவும் தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருப்பதாகவும்  மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.  மேலும், வெண்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகளுடன் தொடர்ந்து எஸ்.பி பாலசுப்பிரமணியத்திற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வெளிநாட்டு மருத்துவ நிபுணர்கள் ஆலோசனையுடன் அவருக்கு  சிகிச்சை  அளிக்கப்பட்டு வருகிறது என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

Next Story