எஸ்.பி பாலசுப்பிரமணியம் உடல் நிலை சீராக உள்ளது: மருத்துவமனை நிர்வாகம்


எஸ்.பி பாலசுப்பிரமணியம் உடல் நிலை சீராக உள்ளது: மருத்துவமனை நிர்வாகம்
x
தினத்தந்தி 21 Aug 2020 12:24 PM GMT (Updated: 21 Aug 2020 12:27 PM GMT)

கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றும் வரும் எஸ்.பி பாலசுப்பிரமணியம் உடல் நிலை சீராக உள்ளது என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை,

இந்திய மொழிகள் அனைத்திலும் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்கள் பாடி கின்னஸ் சாதனை நிகழ்த்திய பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு கடந்த 5-ந் தேதி கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள எம்.ஜி.எம். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். லேசான  கொரோனா தொற்று உள்ளது என்றும், இரு தினங்களில் குணமடைந்து வீடு திரும்பி விடுவேன் என்றும் அவரே வீடியோவில் நம்பிக்கை தெரிவித்து இருந்தார்.

ஆனால் கடந்த 13-ந் தேதி உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டு மருத்துவ குழுவின் ஆலோசனையின்படி தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். செயற்கை சுவாசக்கருவிகள் பொருத்தப்பட்டன. அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்றும், மருத்துவ குழுவின் தீவிர கண்காணிப்பில் இருக்கிறார் என்றும் மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

பொதுமருத்துவம், இருதய நோய், நுரையீரல், தொற்றுநோய் போன்றவற்றில் நிபுணத்துவம் உள்ள மருத்துவ குழு அமைத்து  அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எஸ்.பி பாலசுப்பிரமணியம் விரைவில் உடல் நலம் தேற வேண்டும் என்று அவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று மாலை மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், எஸ்.பி பாலசுப்பிரமணியம் உடல் நிலை சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தீவிர சிகிச்சை பிரிவில் எக்மோ, செயற்கை சுவாசம் ஆகியவற்றின் மூலம் அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story