செப்டம்பரிலும் ஊரடங்கு நீடிக்குமா? - கலெக்டர்கள், மருத்துவ நிபுணர் குழுவுடன் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை


செப்டம்பரிலும் ஊரடங்கு நீடிக்குமா? - கலெக்டர்கள், மருத்துவ நிபுணர் குழுவுடன் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை
x
தினத்தந்தி 29 Aug 2020 12:00 AM GMT (Updated: 28 Aug 2020 10:21 PM GMT)

அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மருத்துவ நிபுணர் குழுவுடன் தனித்தனியாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (சனிக்கிழமை) தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்துகிறார்.

சென்னை,

கொரோனா தொற்று பரவலைத் தடுக்க கடந்த மார்ச் 24-ந் தேதியில் இருந்து ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. வருகிற 31-ந் தேதிவரை ஊரடங்கு நீட்டிக் கப்பட்டுள்ளது. மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தமிழக அரசு படிப்படியாக தளர்வுகளை அனுமதித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பரவல் சவாலாகவே உள்ளது. தற்போது தமிழகத்தில் பொதுப் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில் ‘இ-பாஸ்’ நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும்படி மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது. இதை பின்பற்றும்பட்சத்தில் மக்களின் நடமாட்டம் அதிகமாகி, தொற்று எண்ணிக்கை உயரவும் வாய்ப்புள்ளதாக அரசு கருதுகிறது. இதுபற்றி ஆலோசிக்க இன்று காலையில் அனைத்து மாவட்ட கலெக்டர்கள் கூட்டத்தை காணொலிக் காட்சி மூலம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூட்டியுள்ளார். ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தொற்று நிலவரம் குறித்து அவர் ஆய்வு மேற்கொள்வார்.

மேலும் இன்று பிற்பகலில் மருத்துவ நிபுணர் குழுவுடன் காணொலிக் காட்சி மூலம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொள்வார். தலைமைச் செயலகத்தில் நடக்கும் இந்த கூட்டங்களில் நடத்தப்படும் ஆலோசனைகளின் அடிப்படையில் முக்கிய முடிவுகளை அரசு எடுக்கும் என்று தெரிகிறது.

இன்னும் 2 நாட்களில் ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வருகிறது. அதை செப்டம்பர் மாதத்துக்கும் நீடிக்க வேண்டுமா? அப்படி நீடித்தால் என்னென்ன தளர்வுகளை மேலும் அளிக்க வேண்டும்? பொதுப் போக்குவரத்தை அனுமதிக்க வாய்ப்புள்ளதா? என்பது பற்றிய அறிவிப்பை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை கூட்டத்துக்கு பின்னர் வெளியிட இருக்கிறார்.

Next Story