தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 7 ஆயிரத்தை கடந்தது; புதிதாக 5,996 பேருக்கு தொற்று


தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 7 ஆயிரத்தை கடந்தது; புதிதாக 5,996 பேருக்கு தொற்று
x
தினத்தந்தி 28 Aug 2020 11:36 PM GMT (Updated: 28 Aug 2020 11:36 PM GMT)

தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 7 ஆயிரத்தை தாண்டியது. புதிதாக 5,996 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் நேற்றைய (வெள்ளிக்கிழமை) கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 73 ஆயிரத்து 186 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 3,543 ஆண்கள், 2,453 பெண்கள் என மொத்தம் 5,996 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த பட்டியலில், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 25 பேரும், 12 வயதுக்கு உட்பட்ட 209 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 904 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர். நேற்றும் அனைத்து மாவட்டங்களிலும் புதிதாக தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 1,296 பேரும், கோவையில் 496 பேரும், சேலத்தில் 437 பேரும், திருவள்ளூரில் 298 பேரும், குறைந்தபட்சமாக பெரம்பலூரில் 9 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் இதுவரை 44 லட்சத்து 20 ஆயிரத்து 697 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இவர்களில் 4 லட்சத்து 9 ஆயிரத்து 238 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 2 லட்சத்து 47 ஆயிரத்து 132 ஆண்களும், 1 லட்சத்து 62 ஆயிரத்து 77 பெண்களும், 3-ம் பாலினத்தவர்கள் 29 பேரும் அடங்குவர். இந்த பட்டியலில் 12 வயதுக்குட்பட்ட 19 ஆயிரத்து 87 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 52 ஆயிரத்து 768 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 69 பேரும், தனியார் மருத்துவமனையில் 33 பேரும் என 102 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 28 பேரும், கடலூரில் 8 பேரும், செங்கல்பட்டு, கோவையில் தலா 6 பேரும், கன்னியாக்குமரி, மதுரையில் தலா 5 பேரும், திருவள்ளூரில் 4 பேரும், திண்டுக்கல், புதுக்கோட்டை, சேலம், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருப்பூரில் தலா 3 பேரும், அரியலூர், கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், நாமக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், விருதுநகரில் தலா 2 பேரும், ஈரோடு, ராணிப்பேட்டை, தென்காசி, தேனி, திருப்பத்தூர், நெல்லை தலா ஒருவரும் என 27 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. இதுவரையில் 7,050 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு 5 ஆயிரத்து 752 பேர் நேற்று ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 1,201 பேரும், கோவையில் 438 பேரும், செங்கல்பட்டில் 334 பேரும், சேலத்தில் 301 பேரும், ராணிப்பேட்டையில் 292 பேரும் அடங்குவர்.

இதுவரையில் தமிழகத்தில் 3 லட்சத்து 49 ஆயிரத்து 682 பேர் கொரோனாவில் இருந்து பூரண குணம் அடைந்து உள்ளனர். தற்போது சிகிச்சையில் 52 ஆயிரத்து 506 பேர் உள்ளனர்.

தமிழகத்துக்கு வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானம் மூலம் வந்த 904 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து விமானம் மூலம் வந்த 814 பேரும், ரெயில் மூலம் வந்த 428 பேரும், சாலை மார்க்கமாக வந்த 4 ஆயிரத்து 46 பேரும், கடல் மார்க்கமாக வந்த 34 பேர் என மொத்தம் 6 ஆயிரத்து 226 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story