கொரோனா இறப்பு விகிதத்தை மேலும் குறைக்க வேண்டும் கலெக்டர்களுக்கு முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்


கொரோனா இறப்பு விகிதத்தை மேலும் குறைக்க வேண்டும் கலெக்டர்களுக்கு முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்
x
தினத்தந்தி 29 Aug 2020 7:13 AM GMT (Updated: 29 Aug 2020 7:13 AM GMT)

தமிழ்நாட்டில் கொரோனா இறப்பு விகிதத்தை மேலும் குறைக்கும் விதமாக மாவட்ட ஆட்சித் தலைவர்கள், சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என முதல் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

சென்னை

தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தில் 7-வது முறையாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு, வரும் 31-ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. ஆனாலும், கொரோனா பாதிப்புதொடர்ந்து அதிகரித்து  கொண்டேவருகிறது. நாள்தோறும் ஏறத்தாழ 6 ஆயிரம்பேர் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். 100-க்கும் அதிகமானவர்கள் உயிரிழக்கின்றனர். கொரோனாவில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்தாலும் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 50 ஆயிரத்துக்கும் மேல் உள்ளது.

இதற்கிடையே, ஊரடங்கில் மேலும் தளர்வுகளை அறிவிக்கவேண்டும், இ-பாஸை ரத்து செய்ய வேண்டும் என்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து அரசை வலியுறுத்தி வருகின்றன. இ-பாஸ் நடைமுறை இருந்தால்தான் தொற்று தொடர்புகளை கண்டறிய முடியும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். இதனால், இ-பாஸ் முறை தொடரும் என்று தெரிகிறது.

இந்நிலையில், 8-ம் கட்டமாக ஊரடங்கை செப்டம்பர் மாதமும் நீட்டிப்பது தொடர்பாக முதல் அமைச்சர் எடப்பாடி  பழனிசாமி இன்று  மாவட்டஆட்சியர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார்.’

கூட்டத்தில்  முதல் அமைச்சர் பேசும் போது கூறியதாவது:-

'கோவிட் வைரஸ் நோய் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு அரசு பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகின்றது. இதுவரை கோவிட் நோய் தொற்று கட்டுப்பாடு, சிகிச்சை மற்றும் நிவாரணப்  பணிகளுக்காக அரசு சுமார் 7,162 கோடி ரூபாய்க்கு மேல் வழங்கியுள்ளது.தற்போது மாநில அளவில் கோவிட் மருத்துவமனைகளில் 58,840 படுக்கைகளும், கோவிட் சிறப்பு மையங்களில் 77,223 படுக்கைகளும் மற்றும் ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய 26,801 படுக்கைகளும்  தயார் நிலையில் உள்ளன.

ஐசியு  வசதி கொண்ட 4,782 படுக்கைகளும், 5,718 வென்டிலேட்டர்களும் தயார் நிலையில் உள்ளன.  கோவிட் தொற்று சிகிச்சைக்காக 2,882 வென்டிலேட்டர்கள் தயார் நிலையில் உள்ளன. நமது மாநிலத்தில் தான் மிக அதிகமாக 146 ஆய்வகங்கள், அதாவது 63 அரசு மற்றும் 83 தனியார் ஆய்வகங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் இதுவரை 45.73 லட்சம் நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே கோவிட்-19 ஆய்வக பரிசோதனை செய்வதில் தமிழ்நாடு தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறது.
    
களப்பணியில் உள்ள அனைத்து பணியாளர்களுக்கும், கட்டுப்பாட்டு பகுதியில் வாழும் மக்களுக்கும், ஜிங்க்  மற்றும் வைட்டமின் மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.தமிழ்நாட்டில்  இந்திய முறை மருத்துவ சிகிச்சையும் நோயாளிகளுக்கு சிறப்பாக அளிக்கப்படுகின்றது. நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிப்பதற்காக சித்த மருந்தான கபசுர குடிநீர் பெரும்பான்மையான மக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இந்நடவடிக்கைகளின் காரணமாக, நாட்டிலேயே சிகிச்சை முடிந்து குணமானவர்கள் (3,49,682 நபர்கள்) 85.45% மேல் உள்ள மாநிலமாகவும்,  மிக குறைவான, அதாவது 1.7% இறப்பு உள்ள மாநிலமாகவும் தமிழ்நாடு விளங்குகிறது என்பதை குறிப்பிட விரும்புகிறேன்.

பொதுமக்களிடம் காய்ச்சல், சளி, வறட்டு இருமல், மூச்சுத் திணறல், உடல் சோர்வு, தலைவலி, நாக்கில் சுவை இழப்பு, மூக்கில் நுகர்வுத் தன்மை இழப்பு போன்ற அறிகுறிகள் தென்பட்டவுடன் 24 மணி நேரத்திற்குள் மருத்துவமனை செல்ல வேண்டும் என்ற விழிப்புணர்வை மாவட்ட ஆட்சியர்கள்  ஏற்படுத்த வேண்டும்.  கோவிட் சுகூஞஊசு பரிசோதனையின் போது மூத்த குடிமக்கள் மற்றும் இணை நோய் உள்ளோரின் மாதிரிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் பரிசோதனைக்கு எடுத்துக் கொண்டு, விரைந்து முடிவுகளை அறிவித்தல் வேண்டும்.  

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கோவிட் நோய் சிகிச்சை குறித்த நிலையான வழிமுறைகள் கடைப்பிக்கப்படுகின்றனவா என்பதை மாவட்ட ஆட்சித் தலைவர்கள்  தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.
·கோவிட் சிறப்பு மையங்கள் சிறப்பாக செயல்படுகின்றன.  அம்மையங்கள் பொதுமக்களுக்கு மேலும் சிறப்பான சேவைகளை வழங்க, உணவு, குடிநீர், கழிப்பிட வசதிகளை அவ்வப்போது மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு செய்ய வேண்டும்.

தமிழ்நாடு குறைவான இறப்பு விகிதத்தை கொண்டு இருந்த போதிலும், இறப்பு விகிதத்தை மேலும் குறைக்கும் விதமாக மாவட்ட ஆட்சித் தலைவர்கள், சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்.  இந்நடவடிக்கைகளால், ஏப்ரல் முதல் ஜூன் 2020 காலங்களில் அதிக புதிய முதலீடுகளை ஈர்த்து, வேலைவாய்ப்புகளை உருவாக்கியதில், இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என்பதை ஒரு தனியார் நிறுவன ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
·    
அரசின் கோவிட் தடுப்பு நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து முழு ஒத்துழைப்பு வழங்கி வரும் பொதுமக்களுக்கும், செம்மையான முறையில் பணியாற்றி வருகின்ற அனைத்து அரசு அலுவலர்களுக்கும், பணியாளர்களுக்கும், எனது மனமார்ந்த நன்றிகளை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். பொது மக்களின் நலன் கருதி, உங்கள் அரசு எடுத்து வரும் கோவிட் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்திற்கும் பொது மக்கள்  தொடர்ந்து முழு ஒத்துழைப்பினை நல்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story