சொந்த ஊரில் வசந்தகுமார் எம்.பி உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி


சொந்த  ஊரில் வசந்தகுமார் எம்.பி உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி
x
தினத்தந்தி 30 Aug 2020 2:50 AM GMT (Updated: 30 Aug 2020 2:50 AM GMT)

வசந்தகுமார் எம்.பி.யின் மறைவு, சோகத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், குமரி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில், வசந்தகுமாரின் படம் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

அகஸ்தீஸ்வரம்,

தமிழக காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவரும், கன்னியாகுமரி தொகுதி எம்.பி.யுமான எச்.வசந்தகுமார் கடந்த 10-ந் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். அவரது மனைவி தமிழ்செல்வி, உதவியாளர் கோபி ஆகியோரும் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து எச்.வசந்தகுமார் தனது மனைவி தமிழ்ச்செல்வியுடன், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில், அவரது உடலில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்தது. இதனால் அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்து வந்தது. மேலும், அவர் நிமோனியா தொற்றாலும் பாதிக்கப்பட்டார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி எச்.வசந்தகுமார் நேற்று முன்தினம் மாலை உயிர் இழந்தார்.

எச்.வசந்தகுமார் உயிர் இழந்த அன்று காலை அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு இருந்தது. அந்த பரிசோதனையில் எச்.வசந்தகுமாருக்கு கொரோனா தொற்று இல்லை (நெகட்டிவ்) என்று முடிவு வந்தது. இதையடுத்து அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றது. சென்னை தி.நகர் நடேசன் தெருவில் உள்ள அவரது  இல்லத்தில் வசந்த குமார் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. 

எச்.வசந்தகுமாரின் உடல் அவரது சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் அடக்கம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. எனவே, அவரது உடல் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் சாலை மார்க்கமாக சென்னையில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் எடுத்து செல்லப்பட்டது.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை அகஸ்தீஸ்வரத்தில் உள்ள அவரது பெற்றோர் நினைவிடம் அருகே எச்.வசந்தகுமாரின் உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது. இறுதி சடங்கில் அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அகஸ்தீஸ்வரத்தில்  வைக்கப்பட்டுள்ள வசந்தகுமார் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 


Next Story