தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து 6 ஆயிரத்தை தாண்டியது - ஒரே நாளில் 80,100 பேருக்கு பரிசோதனை


தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து 6 ஆயிரத்தை தாண்டியது - ஒரே நாளில் 80,100 பேருக்கு பரிசோதனை
x
தினத்தந்தி 30 Aug 2020 11:31 PM GMT (Updated: 30 Aug 2020 11:31 PM GMT)

தமிழகத்தில் ஒரே நாளில் 80 ஆயிரத்து 100 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து 2-வது நாளாக நேற்றும் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியது

சென்னை,

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று 80 ஆயிரத்து 100 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 3,824 ஆண்கள், 2,671 பெண்கள் என மொத்தம் 6,495 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டியலில், வெளிநாடுகளில் இருந்து வந்த ஒருவரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 26 பேரும், 12 வயதுக்கு உட்பட்ட 241 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 966 முதியவர்களும் இடம்பெற்றுள்ளனர். நேற்று அனைத்து மாவட்டங்களிலும் புதிய தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 1,249 பேரும், கோவையில் 498 பேரும், செங்கல்பட்டில் 419 பேரும் குறைந்தபட்சமாக பெரம்பலூர், ராமநாதபுரத்தில் தலா 23 பேரும், தர்மபுரியில் 14 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் இதுவரை 45 லட்சத்து 79 ஆயிரத்து 770 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 4 லட்சத்து 22 ஆயிரத்து 85 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த பட்டியலில் 2 லட்சத்து 54 ஆயிரத்து 837 ஆண்களும், 1 லட்சத்து 67 ஆயிரத்து 219 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 29 பேரும் அடங்குவர். அதில் 12 வயதுக்கு உட்பட்ட 19 ஆயிரத்து 564 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 54 ஆயிரத்து 748 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 57 பேரும், தனியார் மருத்துவமனையில் 37 பேரும் என 94 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர். இதில் சென்னையை சேர்ந்த 3 வயது சிறுமி ஒருவர், கடந்த 27-ந்தேதி உடல்நிலை சரி இல்லாத நிலையில் சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நேற்று உயிரிழந்தவர்களில், சென்னையில் 16 பேரும், சேலத்தில் 9 பேரும், செங்கல்பட்டில் 8 பேரும், கோவை, கடலூர், காஞ்சீபுரத்தில் தலா 5 பேரும், திருச்சி, திருவள்ளூர், கள்ளக்குறிச்சியில் தலா 4 பேரும், கன்னியாகுமரி, மதுரை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருப்பத்தூர், வேலூரில் தலா 3 பேரும், நெல்லை, திண்டுக்கலில் தலா இருவரும், ஈரோடு, கிருஷ்ணகிரி, நாமக்கல், ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, திருவண்ணாமலை, திருப்பூர், விருதுநகரில் தலா ஒருவரும் என 27 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்து உள்ளது. இதுவரையில் தமிழகத்தில் 7 ஆயிரத்து 231 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 6 ஆயிரத்து 406 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 1,427 பேரும், கடலூரில் 483 பேரும், கோவையில் 451 பேரும் அடங்குவர். இதுவரையில் 3 லட்சத்து 62 ஆயிரத்து 133 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 52 ஆயிரத்து 721 பேர் உள்ளனர்.

தமிழகத்துக்கு வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானம் மூலம் வந்த 911 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து விமானம் மூலம் வந்த 827 பேரும், ரெயில் மூலம் வந்த 428 பேரும், சாலை மார்க்கமாக வந்த 4 ஆயிரத்து 79 பேரும், கடல் மார்க்கமாக வந்த 34 பேர் என மொத்தம் 6 ஆயிரத்து 279 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story