பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் நாளை தண்ணீர் திறப்பு - முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு


பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் நாளை தண்ணீர் திறப்பு - முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு
x
தினத்தந்தி 31 Aug 2020 3:01 AM GMT (Updated: 31 Aug 2020 3:01 AM GMT)

விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்காக பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் இருந்து நாளை (செவ்வாய்க்கிழமை) தண்ணீர் திறந்துவிட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை, 

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றில் உள்ள 11 கால்வாய்களின் கீழுள்ள பயிர்களை காக்கவும் மற்றும் குடிநீர் தேவைகளுக்காகவும் பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களில் இருந்து, தண்ணீர் திறந்துவிடுமாறு விவசாயப் பெருமக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.

விவசாய பெருமக்களின் கோரிக்கையை ஏற்று, திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றில் உள்ள 11 கால்வாய்களின் கீழுள்ள வாழை பயிர்களை காக்கவும், குடிநீர் தேவைகளுக்காகவும், சிறப்பு நிகழ்வாக, 1-9-2020 (நாளை) முதல் 15-9-2020 வரை 15 நாட்களுக்கு நாளொன்றுக்கு 1,400 கன அடி (வினாடிக்கு) வீதமும் மற்றும் வடக்கு கோடை மேலழகியான் கால்வாய் (2,260 ஏக்கர்), தெற்கு கோடை மேலழகியான் கால்வாய் (870 ஏக்கர்), நதியுண்ணி கால்வாய் (2,460 ஏக்கர்), கன்னடியன் கால்வாய் (12,500 ஏக்கர்) மற்றும் கோடகன் கால்வாய் (6,000 ஏக்கர்) ஆகியவைகளின் கீழுள்ள 24,090 ஏக்கரில் நேரடி மற்றும் மறைமுக பாசனப் பரப்புகளில் பகுதியாக கார் பருவ சாகுபடியில் பயிரிடப்பட்ட பயிர்களை காக்கும் பொருட்டும், சிறப்பு நிகழ்வாக, 16-9-2020 முதல் 31-10-2020 வரை 46 நாட்களுக்கு நாளொன்றுக்கு 800 கனஅடி (வினாடிக்கு) வீதமும் ஆக மொத்தம் 4993.92 மில்லியன் கனஅடிக்கு மிகாமல், பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களில் இருந்து தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன்.

இதனால், திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, திருநெல்வேலி மற்றும் பாளையங்கோட்டை வட்டங்கள் மற்றும் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம், ஏரல், தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் வட்டங்களிலுள்ள கிராமங்களில் உள்ள பொதுமக்களின் பாசனம் மற்றும் குடிநீர் தேவைகள் பூர்த்தி செய்யப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல்பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story