சேலம், கோவையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பு 14 மாவட்டங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை


சேலம், கோவையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பு 14 மாவட்டங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை
x
தினத்தந்தி 1 Sep 2020 12:06 AM GMT (Updated: 1 Sep 2020 12:06 AM GMT)

தமிழகத்தின் 14 மாவட்டங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் சேலம், கோவையில் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

சென்னை,

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று 73 ஆயிரத்து 97 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 3,533 ஆண்கள், 2,423 பெண்கள் என மொத்தம் 5,956 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டியலில், வெளிநாடுகளில் இருந்து வந்த 7 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 24 பேரும், 12 வயதுக்கு உட்பட்ட 184 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 871 முதியவர்களும் இடம்பெற்றுள்ளனர். நேற்று அனைத்து மாவட்டங்களிலும் புதிய தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 1,150 பேரும், கோவையில் 589 பேரும், சேலத்தில் 497 பேரும் குறைந்தபட்சமாக கிருஷ்ணகிரியில் 11 பேரும், பெரம்பலூரில் 10 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் இதுவரை 46 லட்சத்து 52 ஆயிரத்து 867 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 4 லட்சத்து 28 ஆயிரத்து 41 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த பட்டியலில் 2 லட்சத்து 58 ஆயிரத்து 370 ஆண்களும், 1 லட்சத்து 69 ஆயிரத்து 642 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 29 பேரும் அடங்குவர். அதில் 12 வயதுக்கு உட்பட்ட 19 ஆயிரத்து 748 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 55 ஆயிரத்து 619 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 56 பேரும், தனியார் மருத்துவமனையில் 35 பேரும் என 91 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர். இதில் சென்னையில் 19 பேரும், கோவையில் 14 பேரும், வேலூர், காஞ்சீபுரத்தில் தலா 8 பேரும், திருவள்ளூரில் 6 பேரும், திருவண்ணாமலையில் 5 பேரும், புதுக்கோட்டையில் 4 பேரும், சேலத்தில் 3 பேரும், செங்கல்பட்டு, கடலூர், ஈரோடு, நாகப்பட்டினம், ராமநாதபுரம், ராணிப்பேட்டை, தஞ்சாவூரில் தலா இருவரும், விருதுநகர், விழுப்புரம், திருச்சி, நெல்லை, தூத்துக்குடி, திருவாரூர், தென்காசி, மதுரை, கன்னியாகுமரி, திண்டுக்கலில் தலா ஒருவரும் என 25 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்து உள்ளது. இதுவரையில் தமிழகத்தில் 7 ஆயிரத்து 322 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 6 ஆயிரத்து 8 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 1,391 பேரும், கோவையில் 436 பேரும், சேலத்தில் 390 பேரும் அடங்குவர். இதுவரையில் 3 லட்சத்து 68 ஆயிரத்து 141 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 52 ஆயிரத்து 578 பேர் உள்ளனர். இதில் 14 மாவட்டங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர் களுக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்துக்கு வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானம் மூலம் வந்த 918 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து விமானம் மூலம் வந்த 833 பேரும், ரெயில் மூலம் வந்த 428 பேரும், சாலை மார்க்கமாக வந்த 4 ஆயிரத்து 97 பேரும், கடல் மார்க்கமாக வந்த 34 பேர் என மொத்தம் 6 ஆயிரத்து 310 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் மேலும் ஒரு தனியார் நிறுவனத்துக்கு கொரோனா பரிசோதனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் 63 அரசு மற்றும் 87 தனியார் நிறுவனங்கள் என மொத்தம் 150 நிறுவனங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story