கிசான் திட்ட முறைகேட்டில் தொடர்புடைய 80 பேர் பணிநீக்கம் - வேளாண் துறை முதன்மை செயலாளர் ககன்தீப்சிங் பேடி


கிசான் திட்ட முறைகேட்டில் தொடர்புடைய 80 பேர் பணிநீக்கம் - வேளாண் துறை முதன்மை செயலாளர் ககன்தீப்சிங் பேடி
x
தினத்தந்தி 8 Sep 2020 10:21 AM GMT (Updated: 8 Sep 2020 10:21 AM GMT)

கிசான் திட்ட முறைகேட்டில் தொடர்புடைய 80 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று வேளாண் துறை முதன்மை செயலாளர் ககன்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளார்.

சென்னை,

கிசான் திட்ட முறைகேடு குறித்து வேளாண் முதன்மை செயலாளர் ககன்தீப்சிங் பேடி சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

கிசான் திட்டத்தில் 3 தவணையாக ரூ.6,000 அளிக்கப்பட்டு வருகிறது. விவசாய நிலம் இல்லாதவர்கள் கிசான் திட்டத்தில் பயன்பெற முடியாது. கிசான் திட்டத்தில் குடும்பத்தில் ஒருவர் மட்டுமே பயன் பெற முடியும். மார்ச் மாதம் வரை கிசான் திட்டத்தில் எந்த முறைகேடும் இல்லை. விவசாயிகளே நேரடியாக பதிவு செய்து கொள்ளும் வகையிலான நடைமுறை தற்போது உள்ளது.

தமிழக வருவாய் மற்றும் வேளாண்மை துறை அதிகாரிகள் இணைந்து இதற்கான பணியில் ஈடுபட்டுள்னர். விவசாயிகளின் பெயர்கள் மற்றும் விவரங்களை சரிபார்க்கும் பணிக்காக அதிகாரிகள் மட்டுமே பயன்படுத்த வேண்டிய கடவுச்சொல்லை, சிலர் முறைகேடாகப் பெற்றுள்ளனர்.

அதைப் பயன்படுத்தி, சில இடைத்தரகர்களும், தனியார் கணினி மையங்களும் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளன. அந்த வகையில், ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் சுமார் 6 லட்சம் பயனாளிகள் சேர்க்கப்பட்டது தெரிய வந்துள்ளது. அதிகாரிகள் பயன்படுத்த வேண்டிய பாஸ்வேர்ட்டை முறைகேடாகப் பயன்படுத்தி மோசடி நடைபெற்றுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தமிழகத்தில் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்பட 13 மாவட்டங்களில் அதிகளவில் முறைகேடு நடந்துள்ளது.

இந்த மோசடி குறித்து விசாரிக்க 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுவரை இந்த சம்பவத்தில் தொடர்புடைய 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 80 பேர் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மோசடியில் தொடர்புடைய 34 அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மோசடியில் ஈடுபட்டவர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டு, அதில் இருந்து பணம் கைப்பற்றப்பட்டு வருகிறது. இதுவரை 32 கோடி ரூபாய் வங்கிக் கணக்குகளில் இருந்து திரும்பப் பெறப்பட்டுள்ளது. நேரடியாக வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை எடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. 

இதுவரை 110 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடைபெற்றுள்ளது. இந்த மோசடியில் ஈடுபட்ட ஒருவர் கூட தப்பிக்க முடியாது. மோசடியில் ஈடுபட்டது யாராக இருந்தாலும் நிச்சயம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு வேளாண் முதன்மை செயலாளர் ககன்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளார்.

Next Story