தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை குறைகிறது; நேற்று 64 பேர் மட்டுமே உயிரிழப்பு


தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை குறைகிறது; நேற்று 64 பேர் மட்டுமே உயிரிழப்பு
x
தினத்தந்தி 10 Sep 2020 9:45 PM GMT (Updated: 10 Sep 2020 8:52 PM GMT)

தமிழகத்தில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. நேற்று 64 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர்.

சென்னை,

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று 81 ஆயிரத்து 66 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 3,377 ஆண்கள், 2,151 பெண்கள் என மொத்தம் 5,528 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டியலில், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 6 பேரும், 12 வயதுக்கு உட்பட்ட 94 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 659 முதியவர்களும் இடம்பெற்றுள்ளனர். நேற்று அனைத்து மாவட்டங்களிலும் புதிய தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 991 பேரும், கோவையில் 440 பேரும், சேலத்தில் 300 பேரும், குறைந்தபட்சமாக விருதுநகரில் 31 பேரும், பெரம்பலூரில் 29 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 54 லட்சத்து 49 ஆயிரத்து 635 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில் 4 லட்சத்து 86 ஆயிரத்து 52 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த பட்டியலில் 2 லட்சத்து 93 ஆயிரத்து 154 ஆண்களும், 1 லட்சத்து 92 ஆயிரத்து 869 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 29 பேரும் அடங்குவர். அதில் 12 வயதுக்கு உட்பட்ட 21 ஆயிரத்து 399 குழந்தைகளும், 12 முதல் 60 வயதுக்கு உட்பட்ட 4 லட்சத்து 1,255 பேரும், 60 வயதுக்கு மேற்பட்ட 63 ஆயிரத்து 398 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை குறைந்து வருகிறது. நேற்று 64 பேர் உயிரிழந்து உள்ளனர். அதில் அரசு மருத்துவமனைகளில் 42 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 22 பேரும் என 64 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர். இதில் சென்னையில் 11 பேரும், நாகப்பட்டினம், சேலத்தில் தலா 7 பேரும், கடலூரில் 6 பேரும், கன்னியாகுமரி, திருவள்ளூரில் தலா 4 பேரும், வேலூரில் 3 பேரும், செங்கல்பட்டு, கோவை, ஈரோடு, ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவண்ணாமலை, நெல்லையில் தலா இருவரும், தூத்துக் குடி, திருவாரூர், திருப்பத்தூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாமக்கல், காஞ்சீபுரம், அரியலூரில் தலா ஒருவரும் என 22 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. இதுவரையில் தமிழகத்தில் 8 ஆயிரத்து 154 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 6 ஆயிரத்து 185 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 1,009 பேரும், சேலத்தில் 567 பேரும், கோவையில் 545 பேரும் அடங்குவர். இதுவரையில் 4 லட்சத்து 29 ஆயிரத்து 416 பேர் குணம் அடைந்துள்ளனர். சிகிச்சையில் 48 ஆயிரத்து 482 பேர் உள்ளனர்.

தமிழகத்துக்கு வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானம் மூலம் வந்த 922 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து விமானம் மூலம் வந்த 880 பேரும், ரெயில் மூலம் வந்த 428 பேரும், சாலை மார்க்கமாக வந்த 4 ஆயிரத்து 209 பேரும், கடல் மார்க்கமாக வந்த 34 பேரும் என மொத்தம் 6 ஆயிரத்து 473 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story