தமிழகத்துக்கு நாளை கிருஷ்ணா நதிநீர் திறப்பு-பூண்டி ஏரி நீர் மட்டம் உயர வாய்ப்பு


தமிழகத்துக்கு நாளை கிருஷ்ணா நதிநீர் திறப்பு-பூண்டி ஏரி நீர் மட்டம் உயர வாய்ப்பு
x
தினத்தந்தி 14 Sep 2020 11:30 PM GMT (Updated: 14 Sep 2020 9:19 PM GMT)

கண்டலேறு அணையிலிருந்து தமிழகத்தில் உள்ள பூண்டி ஏரிக்கு நாளை (புதன்கிழமை) கிருஷ்ணா நதிநீர் திறக்கப்படும் என்று ஆந்திர அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஊத்துக்கோட்டை, 

கண்டலேறு அணையிலிருந்து தமிழகத்தில் உள்ள பூண்டி ஏரிக்கு நாளை (புதன்கிழமை) கிருஷ்ணா நதிநீர் திறக்கப்படும் என்று ஆந்திர அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் காரணமாக வறண்டு கிடக்கும் பூண்டி ஏரியின் நீர் மட்டம் உயர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்ற தமிழக அரசு, ஆந்திர மாநில அரசுடன் 1983-ம் ஆண்டில் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தை வகுத்தது. அதன்படி ஆந்திர அரசு வருடந்தோறும் 12 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்துக்கு வழங்க வேண்டும். ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி., ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. தண்ணீரை நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும்.

அதன்படி கடந்த ஆண்டு கண்டலேறு அணையில் போதிய நீர் இல்லாத காரணத்தால் பூண்டி ஏரிக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 25-ந் தேதி தண்ணீர் திறந்து விட்டனர். அதைத்தொடர்ந்து, கடந்த ஜூன் மாதம் 24-ந் தேதி வரை தொடர்ந்து பூண்டி ஏரிக்கு தண்ணீீர் வந்து சேர்ந்தது.

அதன்படி இந்த இடைப்பட்ட காலத்தில் ஒரே தவணையில் சாதனை அளவாக 8.060 டி.எம்.சி. தண்ணீர் பூண்டி ஏரிக்கு வந்து சேர்ந்தது. இந்தநிலையில், கண்டலேறு அணையில் திடீரென நீர் இருப்பு குறைந்ததால் பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.


இந்நிலையில் சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட கோரி தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் 2 முறை ஆந்திர அரசுக்கு கடிதம் எழுதினர்.

மேலும், சில நாட்களுக்கு முன்பு திருப்பதியில் நடைபெற்ற தெலுங்கு கங்கை திட்ட தொழில்நுட்ப வல்லுநர் குழு கூட்டத்திலும் தமிழக பொதுப் பணித்துறை அதிகாரிகள் வலியுறுத்தினர்.

அப்போது செப்டம்பர் 14-ந் தேதி கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்படும் என்று ஆந்திர பொதுப் பணித்துறை அதிகாரிகள் உறுதி அளித்தனர். இந்த நிலையில் கண்டலேறு அணையிலிருந்து நாளை (புதன்கிழமை) காலை 10 மணிக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளதாக ஆந்திர பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொவித்தனர்.


இந்த நீர் வருகிற 19்-ந் தேதி தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்டிற்க்கும், 20-ந் தேதி பூண்டி ஏரிக்கும் சென்றடைய வாய்ப்பு உள்ளது. கண்டலேறு அணையில் நேற்று காலை நிலவரப்படி 35 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது. கண்டலேறு தண்ணீர் பூண்டி ஏரிக்கு வந்து சேர்ந்தால் வறண்டு கிடக்கும் ஏரியின் நீர் மட்டம் உயர வாய்ப்பு உள்ளது.

பூண்டி ஏரியின் உயரம் 35 அடியாகும். 3,231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். நேற்று காலை 6 மணி நிலவரப்படி ஏரியின் நீர் மட்டம் 16.92 அடியாக பதிவானது. வெறும் 67 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு மழை நீர் வினாடிக்கு 30 கனஅடி வீதம் வந்து கொண்டிருக்கிறது. ஏரியில் இருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு வினாடிக்கு 15 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

Next Story