சென்னையில் இருந்து 6 சிறப்பு விமானங்களில் 629 பேர் வெளிநாடுகளுக்கு சென்றனர்


சென்னையில் இருந்து 6 சிறப்பு விமானங்களில் 629 பேர் வெளிநாடுகளுக்கு சென்றனர்
x
தினத்தந்தி 18 Sep 2020 12:51 AM GMT (Updated: 18 Sep 2020 12:51 AM GMT)

சென்னையில் இருந்து 6 சிறப்பு விமானங்களில் 629 பேர் வெளிநாடுகளுக்கு சென்றனர்.

சென்னை,

கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு நாடுகளில் சிக்கி தவித்தவர்களை மத்திய அரசின் வந்தே பாரத் என்ற திட்டத்தில் சிறப்பு விமானங்களில் இந்தியா அழைத்து வரப்படுகின்றனர். தமிழகத்தில் மட்டும் இந்த திட்டம் மூலமாக 80 ஆயிரம் பேர் அழைத்து வரப்பட்டு உள்ளனர்.

இந்தநிலையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தங்கியிருந்த என்.ஆர்.ஐ., வேலைக்கு செல்ல கூடியவர்கள், வெளிநாடுகளில் கார்ப்பரேட் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் ஆகியோர் செல்ல மத்திய அரசிடம் இருந்து சிறப்பு அனுமதி பெறப்பட்டது. இதையடுத்து சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு முனையத்தில் இருந்து அமெரிக்கா, பாரீஸ், துபாய், அபுதாபி போன்ற நாடுகளுக்கு சென்ற 6 சிறப்பு விமானங்களில் 629 பேர் புறப்பட்டு சென்றனர்.

அதேபோல் அமெரிக்கா, குவைத், அபுதாபி, சார்ஜா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருந்து 10 சிறப்பு விமானங்களில் 913 பேர் சென்னை வந்தனர். இவர்கள் குடியுரிமை, சுங்க சோதனை முடித்து கொண்டு வீடுகளில் தனிமைப்படுத்தி கொள்ள அனுப்பி வைக்கப்பட்டனர்.

Next Story