அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளர் குறித்த ஒருமித்த கருத்து இன்னும் ஏற்படவில்லை


அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளர் குறித்த ஒருமித்த கருத்து இன்னும் ஏற்படவில்லை
x
தினத்தந்தி 20 Sep 2020 10:37 AM GMT (Updated: 20 Sep 2020 10:37 AM GMT)

அதிமுக சார்பில் முதல்வர் வேட்பாளரை அறிவிப்பது குறித்த ஒருமித்த கருத்து இன்னும் ஏற்படவில்லை என திமுக எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜி கூறினார்.

கரூர்,

கரூர் மாவட்டத்தில் இன்று ஆன்லைன் மூலம் உறுப்பினர் சேர்க்கை பணியை மாவட்ட பொறுப்பாளரும், அரவக்குறிச்சி எம்.எல்.ஏ.வுமான செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார். இதன் பின்னர், செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாளையொட்டி, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், 'எல்லோரும் நம்முடன்' என்ற, திட்டத்தின் கீழ், ஆன்லைன் மூலம் உறுப்பினர் சேர்க்கை பணியை துவக்கி வைத்தார்.

அதில், கடந்த மூன்று நாட்களில், ஒரு லட்சம் உறுப்பினர்கள் மாநிலம் முழுவதும் சேர்ந்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் உள்ள, நான்கு சட்டசபை தொகுதிகளில் தலா, 10 ஆயிரம் உறுப்பினர்களை புதிதாக சேர்க்க திட்டமிட்டுள்ளோம்.

கரூர் மாவட்டத்தில், நான்கு தொகுதிகளிலும் தலா, 50 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில், திமுக கூட்டணி வெற்றி பெறும். திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில், ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக ஏற்று கொண்டுள்ளனர். ஆனால் அதிமுக சார்பில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்த ஒருமித்த கருத்து இன்னும் ஏற்படவில்லை” என்று அவர் கூறினார்.

Next Story