விவசாயிகளுக்கு எதிரான 3 சட்டங்களையும் நன்மை பயக்கும் என்று கூறுவது அர்த்தமற்ற செய்கையின் உச்சகட்டம் எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் பதில்


விவசாயிகளுக்கு எதிரான 3 சட்டங்களையும் நன்மை பயக்கும் என்று கூறுவது அர்த்தமற்ற செய்கையின் உச்சகட்டம் எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் பதில்
x
தினத்தந்தி 21 Sep 2020 12:12 AM GMT (Updated: 21 Sep 2020 12:12 AM GMT)

விவசாயிகளுக்கு எதிரான 3 சட்டங்களையும் நன்மை பயக்கும் என்று ஆதரிப்பதாக கூறுவது அர்த்தமற்ற செய்கையின் உச்சகட்டம் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.

சென்னை,

தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

விவசாயிகளுக்கு எதிரான 3 சட்டங்களுக்கும், விருப்பத்துடன் முன்வந்து ஆதரவு அளித்துவிட்டு அதனால் பாதிப்பு ஏதுமில்லை என்று கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், மத்திய பா.ஜ.க. அரசுக்கும், களிப்பு பொங்க வக்காலத்து வாங்கி ஒரு மாநிலத்தின் முதல்-அமைச்சரே அறிக்கை வெளியிட்டிருப்பது, அவரால் மக்களுக்கு உருவான பல்வேறு மோசமான நிகழ்வுகளில், மிகவும் மோசமானதாகும்.

பா.ஜ.க.வின் விவசாயிகள் விரோத மசோதாக்களை பஞ்சாப் மாநிலம் மட்டுமின்றி, நாட்டின் பல்வேறு மாநிலங்களும், பா.ஜ.க.வின் கூட்டணிக் கட்சிகள் மட்டுமின்றி வேறு அரசியல் கட்சிகளும் கடுமையாக எதிர்த்து வருகின்றன. 13 கட்சிகள் அந்த மசோதாக்களை எதிர்க்கின்றன; அ.தி.மு.க. உள்ளிட்ட 4 கட்சிகள் மட்டும் ஆதரிக்கின்றன.

இவ்வாறான நிலையில் முதல்-அமைச்சர் அறிக்கை வெளியிட்டுள்ளதற்குப் பதிலாக, “நான் பா.ஜ.க. கூட்டணியில் இருக்கிறேன். முதல்- அமைச்சர் பதவியைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். இன்னும் 6 மாதங்களுக்கு நானும், எனது அமைச்சரவை சகாக்களும், ஏற்கனவே செய்த இப்போதும் செய்து கொண்டிருக்கின்ற, இனியும் செய்வதற்குத் திட்டமிட்டுள்ள ஊழல் முறைகேடுகளில் இருந்து தப்பிக்க, பா.ஜ.க.வின் பாதுகாப்பு தேவை. அதனால் ஆதரித்தேன்; மன்னித்து விடுங்கள்“ என்று தமிழக விவசாயப் பெருமக்களிடம், தண்டனிட்டு, கையெடுத்துக் கும்பிட்டுக் கேட்டிருக்கலாம்.

“அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம்“, “விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்த விவசாயச் சட்டம்“, “விவசாயிகளின் விளைபொருள் உத்தரவாதச் சட்டம்“ ஆகிய மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து தனது மேஜையில் வைத்துக்கொண்டு ஊன்றிப் படித்துப் பார்த்துவிட்டு அல்லது அவற்றை அறிந்தோர் படிக்க, பக்கத்தில் இருந்து கேட்டுவிட்டு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டிருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் யாரோ ஒருவர் எழுதிக்கொடுத்த அறிக்கையை வெளியிட்டு, விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் என்று உணர்ந்து சட்டங்களை ஆதரித்ததாகக் கூறியிருப்பது, அர்த்தமற்ற செய்கையின் உச்சகட்டம்.

இந்த 3 சட்டங்கள் குறித்து ஆங்கில பத்திரிகை ஒன்றில், “சந்தை தோல்வி” என்று ஒரு தலையங்கம் எழுதப்பட்டுள்ளது. அதில் இந்த மூன்று சட்டங்களால் “விவசாயிகளின் சந்தைச் சுதந்திரம் பறிபோகும். அவர்களின் விளை பொருட்களுக்குக் குறைந்தபட்ச விலை கிடைக்காது. மாநிலங்களில் உள்ள வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் பாதிக்கப்படும்.

பெரும்பான்மையாக உள்ள அமைப்பு சாரா சிறு விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களை ஒழித்த பீகார் அரசின் நடவடிக்கை தோல்வியில் முடிந்து விட்டது” என்றெல்லாம் கடுமையாக எச்சரித்துவிட்டு, உண்மையிலேயே வேளாண்துறை முன்னேற்றத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற அக்கறை மத்திய அரசுக்கு இருந்தால், வேளாண்மை சம்பந்தப்பட்ட முடிவுகள் எடுக்கும் அதிகாரத்தை தன்னிடம் குவித்துக் கொள்வதைவிட “மாநிலங்களில் உள்ள வேளாண் விற்பனை ஒழுங்குமுறைக் கூடங்களை விரிவுபடுத்த மாநில அரசுகளுக்கு நிதியுதவி செய்ய வேண்டும். விவசாய உட்கட்டமைப்பை வலுப்படுத்த உதவி செய்ய வேண்டும்” என்று கோடிட்டு காட்டியுள்ள பொருள் பொதிந்த விளக்கங்களையும்; மற்றொரு ஆங்கில பத்திரிகை, இந்தச் சட்டங்கள் ‘பொன் முட்டையிடும் வாத்தைக் கொன்றுவிட எடுக்கப்படும் முயற்சியாகும்’ என்று நேற்றைய தலையங்கத்தில் குறிப்பிட்டிருப்பதையும்; ஆற, அமர உட்கார்ந்து முதல்-அமைச்சர் பொறுமையாகப் படித்துத் தெரிந்துகொள்ளவும், புரிந்துகொள்ளவும் வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

விவசாயிகள் கடனைத் தள்ளுபடி செய்ய மறுத்து சுப்ரீம் கோர்ட்டிற்கே சென்று தடை பெற்றவர், சேலம் எட்டு வழிச்சாலைத் திட்டத்தைக் கொண்டு வந்து விவசாயிகளின் நிலங்களைப் பறித்திடத் தீவிரம் காட்டுபவர், ‘பி.எம். கிசான்’ திட்டத்தில் 6 லட்சம் போலிகளைச் சேர்த்து, விவசாயிகள் வயிற்றில் அடித்தவர், இன்றைக்கு விவசாயிகளைப் பெரிதும் பாதிக்கும் 3 சட்டங்களையும் ஆதரித்து விட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் விவசாயிகள் விரோத மத்திய பா.ஜ.க. அரசுக்கும் சாமரம் வீசுவதையும்; தன்னை விவசாயி என்று கூறிக் கொள்வதையும்; வரலாறு மன்னிக்காது.

ஆயிரம் முறை ‘விவசாயி’ என்று கூறிக்கொள்வேன் என்கிறார்; பள்ளியில் படிக்கும் மாணவன் தவறாக எழுதிவிட்ட சொல்லை ஆயிரம் தடவை சரியாக எழுதும்படி ஆசிரியர் தண்டித்ததைப்போல இருக்கிறது இவர் சொல்வது. இன்னும் 6 மாதங்களுக்கு வேண்டுமென்றால் ஊழல் வழக்குகளில் இருந்து “பா.ஜ.க.,வின் பாதுகாப்பு” வளையத்திற்குள் நின்று தப்பித்துக் கொள்ள உதவலாம்; அதன் பிறகு மக்கள் எனும் மகேசன் தரப்போகும் தண்டனையில் இருந்து நிச்சயம் தப்பிக்க முடியாது.

முதல்-அமைச்சரின் நேற்றைய 6 பக்க ஆதரவு அறிக்கையை நிராகரிக்கும் வகையில் இன்றைக்கு மூத்த அரசியல் தலைவரும், அ.தி.மு.க.வின் மாநிலங்களவை உறுப்பினருமான எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் இந்த வேளாண் சட்டங்களைக் கடுமையாக எதிர்த்துப் பேசியுள்ளார். “மக்களவையில் ஆதரவு, மாநிலங்களவையில் எதிர்ப்பு” என்ற அ.தி.மு.க.வின் நகைச்சுவைக்குப் பிறகு இப்போது முதல்-அமைச்சரின் முன்பு இருப்பது ஒரேயொரு வழி. ‘என்னையும், எனது அமைச்சர்களையும் பாதுகாத்துக்கொள்ள உங்களைப் பலிபீடத்தில் ஏற்ற முயற்சி செய்து பார்த்தேன்” என்று, “ஒப்புதல் வாக்குமூலம்” அளித்து விவசாயப் பெருமக்களிடம் உடனடியாக மன்னிப்பு கேளுங்கள். அதுதான் நீங்கள் வகிக்கும் பதவிக்கு அழகு. தற்காலிகப் பாதுகாப்புக் கவசம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story