மறைந்த பாடகர் எஸ்.பி.பி.யின் உடல் இன்று நல்லடக்கம் - அஞ்சலி செலுத்த பொதுமக்களுக்கு அனுமதி


மறைந்த பாடகர் எஸ்.பி.பி.யின் உடல் இன்று நல்லடக்கம் - அஞ்சலி செலுத்த பொதுமக்களுக்கு அனுமதி
x
தினத்தந்தி 26 Sep 2020 3:17 AM GMT (Updated: 26 Sep 2020 3:17 AM GMT)

மறைந்த பாடகர் எஸ்.பி.பி.யின் உடலை அவரது பண்ணை தோட்டத்தில் இன்று நல்லடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

சென்னை,

சென்னை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்(வயது 74) நேற்று மரணம் அடைந்தார். இந்திய இசை உலகில் நீங்காத இடம் பிடித்தவரும், பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரருமான எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மறைவு திரை உலகத்தினரையும், அவரது ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த நிலையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் ஆஸ்பத்திரியில் இருந்து ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் நேற்று மதியம் 3.50 மணி அளவில் வீட்டுக்கு எடுத்துச்செல்லப்பட்டது. அங்கு அவருடைய உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள், நடிகர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தினார்கள்.

இதனையடுத்து நேற்று இரவு 8 மணிக்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல் சென்னை செங்குன்றத்தை அடுத்த தாமரைப்பாக்கத்தில் உள்ள அவருடைய பண்ணை இல்ல வளாகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது வழி நெடுகிலும் அவரது உடலுக்கு ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். பண்ணை வீட்டில் இறுதிச்சடங்குகள் நடத்தப்பட்டு இன்று காலை 11 மணி அளவில் உடல் அடக்கம் செய்யப்படுகிறது.

கொரோனா தொற்று காலம் என்பதால் பொது மக்கள் பெரும் எண்ணிக்கையில் கூடுவதை தவிற்பதற்காக, அப்பகுதியில் சுமார் 500 போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எஸ்.பி.பி உடலுக்கு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று கூறப்பட்ட நிலையில், தற்போது பொதுமக்களுக்கும் சில கட்டுப்பாடுகளுடன் அஞ்சலி செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை எஸ்.பி.அரவிந்தன் தெரிவித்துள்ளார்.

Next Story