பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடலுக்கு அவரது குடும்பத்தினர் இறுதி மரியாதை


பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடலுக்கு அவரது குடும்பத்தினர் இறுதி மரியாதை
x
தினத்தந்தி 26 Sep 2020 5:35 AM GMT (Updated: 26 Sep 2020 5:35 AM GMT)

பாடகர் எஸ்.பி.பி. உடலுக்கு அவரது மகன் எஸ்.பி.பி.சரண், சகோதரி சைலஜா உள்ளிட்டோர் இறுதி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

சென்னை,

சென்னை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்(வயது 74) நேற்று மரணம் அடைந்தார். இந்திய இசை உலகில் நீங்காத இடம் பிடித்தவரும், பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரருமான எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மறைவு திரை உலகத்தினரையும், அவரது ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அவரது உடல் நேற்று இரவு 8 மணிக்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல் சென்னை செங்குன்றத்தை அடுத்த தாமரைப்பாக்கத்தில் உள்ள அவருடைய பண்ணை இல்ல வளாகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பண்ணை வீட்டில் இறுதிச்சடங்குகள் நடத்தப்பட்டு இன்று காலை 11 மணி அளவில் உடல் அடக்கம் செய்யப்படுகிறது.

அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பல்வேறு ஊர்களில் இருந்து அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் வந்துள்ளனர். பாடகர் மனோ, இயக்குனர்கள் அமீர், பாரதிராஜா உள்ளிட்ட பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். ரசிகர்களுக்கு அஞ்சலி செலுத்த அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை 7 மணியளவில் அனுமதி வழங்கப்பட்டது.

மேலும் எஸ்.பி.பி.யின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில், காவல்துறை மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்படும் என்று முதல்வா் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இந்நிலையில் தற்போது அவரது மகன் எஸ்.பி.பி.சரண், சகோதரி சைலஜா உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரும், இறுதிச்சடங்குகளை செய்து வருகின்றனர். இதன் பிறகு இன்னும் சிறிது நேரத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

Next Story