சென்னை விமான நிலையத்தில் 3 விமானங்கள் தரையிறங்க முடியாமல் தவிப்பு


சென்னை விமான நிலையத்தில் 3 விமானங்கள் தரையிறங்க முடியாமல் தவிப்பு
x
தினத்தந்தி 30 Sep 2020 2:01 AM GMT (Updated: 30 Sep 2020 2:01 AM GMT)

சென்னை விமான நிலையத்தில் இடி-மின்னலுடன் பெய்த மழை காரணமாக 3 விமானங்கள் தரையிறங்க முடியாமல் தவித்து வானத்தில் வட்டமடித்தன.

ஆலந்தூர், 

சென்னை விமான நிலைய பகுதியில் சூறைக்காற்று, இடி-மின்னலுடன் பெய்த மழை காரணமாக 3 விமானங்கள் தரையிறங்க முடியாமல் தவித்து வானத்தில் வட்டமடித்தன.

சென்னை மற்றும் புறநகா் பகுதிகளான ஆலந்தூர், ஆதம்பாக்கம், மடிப்பாக்கம், மீனம்பாக்கம், பரங்கிமலை உள்பட பல பகுதிகளில் 2-வது நாளாக நேற்று மாலை திடீரென பலத்த சூறைக்காற்று மற்றும் இடி, மின்னலுடன் மழை பெய்தது.

இந்த நிலையில், மதுரையில் இருந்து சென்னைக்கு 81 பயணிகளுடன் மாலை 5.20 மணிக்கு தரையிறங்க வேண்டிய விமானம், சென்னை விமான நிலைய பகுதியில் அடித்த பலத்த சூறைக்காற்று, இடி, மின்னல் மழை காரணமாக விமானநிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் அனுமதி தரவில்லை.

அதைத்தொடர்ந்து, விமானத்தை வானிலேயே தொடா்ந்து வட்டமடிக்க செய்தனா். அதேபோல் தோகாவில் இருந்து 128 பயணிகளுடன் மாலை 5.15 மணிக்கு தரையிறங்க வந்த சிறப்பு விமானம், குவைத்தில் இருந்து மாலை 5.45 மணிக்கு தரையிறங்க வேண்டிய சரக்கு விமானம் ஆகியவை அதிகாரிகளின் அனுமதி வேண்டி தரையிறங்க முடியாமல் தவித்தபடி வானில் தொடா்ந்து வட்டமடித்தபடி இருந்தன.

அதன் பின்னர், மாலை 6.30 மணிக்கு வானிலை சீரடைந்ததும் 3 விமானங்களும் ஒன்றன் பின்பு ஒன்றாக தரையிறங்கின. இதனால் சென்னை விமான நிலையத்தில் சுமாா் 1 மணி நேரம் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.

Next Story