கூட்டு சேர்ந்து கொள்ளையடிப்பதற்காகவே எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் ஒன்று கூடி இருக்கிறார்கள் - மு.க.ஸ்டாலின் பேச்சு


கூட்டு சேர்ந்து கொள்ளையடிப்பதற்காகவே எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் ஒன்று கூடி இருக்கிறார்கள் - மு.க.ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 7 Oct 2020 10:45 PM GMT (Updated: 7 Oct 2020 10:38 PM GMT)

கூட்டு சேர்ந்து கொள்ளையடிப்பதற்காகவே எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் ஒன்று கூடி இருக்கிறார்கள் என்று தி.மு.க. முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் பேசினார்.

சென்னை,

கள்ளக்குறிச்சி மாவட்ட தி.மு.க. சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலமாக பங்கேற்று பேசியதாவது:-

தமிழகத்தில் மட்டும் 46 சர்க்கரை ஆலைகள் மூலமாக விவசாயிகளுக்கு சுமார் ரூ.2 ஆயிரம் கோடி தரப்படவேண்டும் என்று சொல்கிறார்கள். இதில் அரசு சர்க்கரை ஆலைகளும் உள்ளன. தனியார் சர்க்கரை ஆலைகளும் உள்ளன. இருவருமே முழுமையாக தரவில்லை. பாக்கி வைத்துள்ளார்கள் என்றால் அந்த தொகையை வாங்கி தரவேண்டியது அரசாங்கத்தின் கடமை அல்லவா? இந்த லட்சணத்தில் மத்திய அரசு வேளாண்மை சட்டம் வந்தால் என்ன ஆகும்? கரும்பு விவசாயியின் வாழ்க்கை, ஆலையில் அரைக்கப்படும் கரும்பாக ஆகிவிட்டது. அதேபோல் மற்ற விவசாயிகளின் வாழ்வையும் நசுக்க நினைக்கிறார்கள். அதற்காகத்தான் வேளாண் சட்டங்களை கொண்டு வந்துள்ளார்கள்.

கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக சட்டம் கொண்டு வந்துவிட்டு, அதனை விவசாயிகள் ஆதரிக்கவேண்டும் என்று பா.ஜ.க. நினைக்கிறது. அந்தச் சட்டத்தை ‘நானும் விவசாயி தான்’ என்று சொல்லிக் கொள்ளும் எடப்பாடி பழனிசாமி ஆதரிக்கிறார். அந்த மூன்று சட்டங்களும் நிறைவேறினால் வேளாண்மை சிதைந்து போகும். விவசாயி வாழ்க்கை இருண்டு போகும். அதனால் நாங்கள் எதிர்க்கிறோம். எல்லா விவசாயிகளுக்கும் இருக்கும் ஒரே எதிர்பார்ப்பு, தான் விளைவிக்கும் பொருளுக்கு உரிய குறைந்தபட்ச விலை வேண்டும் என்பதுதான். அதுவே இந்த மூன்று சட்டத்திலும் இல்லை.

இது ஒன்றே போதாதா இந்த சட்டத்தை எதிர்ப்பதற்கு? ஆனால் எல்லாம் தெரிந்தவரைப் போல ஆதரிக்கிறார் எடப்பாடி பழனிசாமி. “ஸ்டாலினுக்கு விவசாயம் தெரியுமா?” என்று கேட்கிறார். நான் விவசாயி என்றோ, விவசாயம் செய்வதாகவோ சொன்னேனா? இல்லையே? விவசாயிகளின் கஷ்டம் தெரிவதற்கு விவசாயியாகத்தான் இருக்கவேண்டும் என்று இல்லை. விவசாயத்தின் மீது, விவசாயிகள் மீது உண்மையான அக்கறை இருந்தால் போதும். அது என்னிடம் இருக்கிறது.

விவசாயிகள் மீது உண்மையான அக்கறை இருப்பதால் தான் அந்த மூன்று சட்டங்களுக்கும் எதிராக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பேசினோம். கண்டித்தோம், எதிர்ப்பு தெரிவித்தோம். விவசாயிகளின் தேவைகளை அறிந்து, அவற்றை நிறைவேற்றிடும் கடமை உணர்ச்சி எடப்பாடி பழனிசாமிக்கு இருந்தால் அவரை விவசாயி என்று ஒப்புக்கொள்ளலாம். மாநில அதிகாரத்தை மத்திய அரசு எடுத்துக் கொள்வதை தடுக்க முடியாத எடப்பாடி பழனிசாமிக்கு தன்னை விவசாயி என்று சொல்லி கொள்ளத்தகுதி நிச்சயமாக கிடையாது? இந்த மூன்று சட்டத்தையும் அவர் எதிர்த்தால் விவசாயி என்று சொல்லிக்கொள்ளலாம். ஆனால் ஒட்டுமொத்தமாக விவசாயிகளுக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டு நானும் விவசாயி தான் என்பது ஊரை ஏமாற்றும் காரியம்.

பொருளாதாரத்தை மொத்தமாக தரை மட்டத்துக்கு இறக்கிய பிறகு இப்போது வேளாண்மைத் துறை பற்றி நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் விளக்கங்கள் கொடுக்கத் தொடங்கி இருக்கிறார். கடந்த நான்காண்டு காலமாக ஆட்சி நடக்கவில்லை. அ.தி.மு.க. என்ற கட்சியை கோட்டையில் வைத்து நடத்திக்கொண்டு இருந்தார்கள். முதலில் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், சசிகலாவுக்கும் சண்டை. அடுத்து எடப்பாடி பழனிசாமிக்கும், பன்னீர்செல்வத்துக்கும் சண்டை.

பின்னர் எடப்பாடி பழனிசாமிக்கும், சசிகலாவுக்கும் சண்டை. அதற்கடுத்து ஓ.பன்னீர்செல்வத்துக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் சண்டை. இதுதான் நான்காண்டு காலமாக தமிழ்நாட்டில் நடக்கிறது. எப்போது யார் காலை வாருவார்கள் என்ற பயத்திலேயே ஆட்சி ஓடுகிறது. ஓ.பன்னீர்செல்வமாக இருந்தாலும் எடப்பாடி பழனிசாமியாக இருந்தாலும் காலில் விழுந்து பதவியை வாங்கியவர்கள் என்பதால் ஒருவர் காலை இன்னொருவர் வாருவது அவர்களது பிறவிக்குணமாக ஆகிவிட்டது.

இப்படிப்பட்ட ஆட்கள் ஒன்று சேர்ந்துள்ளார்கள் என்றால் என்ன அர்த்தம்? மக்களுக்காகவா? அல்ல. இன்னும் ஆட்சி முடிய 6 மாதம் இருக்கிறது. அதுவரைக்கும் ஒன்றாக இருந்து கொள்ளையடிப்போம் என்பதற்காக ஒன்றுசேர்ந்துள்ளார்கள். இன்று நடப்பது ஆட்சியல்ல, வீழ்ச்சி. இந்த வேதனையாட்சி விரைவில் முடிவுக்கு வரவேண்டும். இந்த வீழ்ச்சி விரைந்து தடுக்கப்படவேண்டும். அதற்கான பிரசாரப் பணியை நீங்கள் தொடர்ந்து செய்யவேண்டும். கொள்ளை கூட்டத்தை கோட்டையை விட்டு வெளியேற்றும் ஜனநாயக போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுப்போம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story