விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடம் ரூ.2.52 கோடி அபராதம் வசூல் - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தகவல்


விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடம் ரூ.2.52 கோடி அபராதம் வசூல் - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தகவல்
x
தினத்தந்தி 9 Oct 2020 12:07 PM GMT (Updated: 9 Oct 2020 12:07 PM GMT)

சென்னையில் அரசின் வழிகாட்டுதல்கள் மற்றும் விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடம் இதுவரை ரூ.2.52 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை அண்ணாநகர் மண்டலம் என்.எஸ்.கே, நகரில் செயல்பட்டு வரும் காய்ச்சல் முகாமை சென்னை மாநகராட்சி ஆணையர் கே.பிரகாஷ் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் நேரில் சென்று பார்வையிட்டனர். இதன் பின்னர் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் சென்னையில் இதுவரை 30 லட்சம் பேர் வீட்டுத் தனிமையை முடித்துக் கொண்டுள்ளதாக குறிப்பிட்டார். தற்போது வரை 2.25 லட்சம் பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், சென்னையில் 50,000க்கும் அதிகமான காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தற்போது பரிசோதனை விகிதம் 3 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், இதனை மேலும் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதற்கிடையில் அரசின் வழிகாட்டுதல்கள் மற்றும் விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு இதுவரை ரூ.2.52 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

பொது மக்கள் அலட்சியம் செய்யாமல் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்திய மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், மாநகராட்சியின் அறிவுறுத்தல்களை பின்பற்றாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Next Story