இதுவரை 6,70,392 பேருக்கு தொற்று: தமிழகத்தில் தொடர்ந்து 3-வது நாளாக கொரோனா பாதிப்பு குறைந்தது


இதுவரை 6,70,392 பேருக்கு தொற்று: தமிழகத்தில் தொடர்ந்து 3-வது நாளாக கொரோனா பாதிப்பு குறைந்தது
x
தினத்தந்தி 14 Oct 2020 10:22 PM GMT (Updated: 14 Oct 2020 10:22 PM GMT)

தமிழகத்தில் தொடர்ந்து 3-வது நாளாக கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது எனவும், இதுவரை 6,70,392 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை, 

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 93 ஆயிரத்து 844 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 2,701 ஆண்கள், 1,761 பெண்கள் என மொத்தம் 4,462 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த பட்டியலில், 12 வயதுக்கு உட்பட்ட 46 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 297 முதியவர்களும் இடம்பெற்றுள்ளனர். நேற்றும் அனைத்து மாவட்டங்களிலும் புதிதாக தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 1,130 பேரும், கோவையில் 389 பேரும், சேலத்தில் 274 பேரும், செங்கல்பட்டில் 272 பேரும், குறைந்தபட்சமாக தென்காசியில் 6 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் இதுவரை 83 லட்சத்து 40 ஆயிரத்து 674 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 6 லட்சத்து 70 ஆயிரத்து 392 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 31 பேரும், தனியார் மருத்துவமனையில் 21 பேரும் என 52 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர்.

இதில் அதிகபட்சமாக சென்னையில் 11 பேரும், கோவையில் 5 பேரும், செங்கல்பட்டில் 4 பேரும், திண்டுக்கல், மதுரை, திருவள்ளூர், வேலூரில் தலா 3 பேரும், கடலூர், காஞ்சீபுரம், கிருஷ்ணகிரி, சேலம், தஞ்சாவூர், திருவாரூரில் தலா 2 பேரும், அரியலூர், கன்னியாகுமரி, நாகப்பட்டினம், நீலகிரி, ராணிப்பேட்டை, நெல்லை, திருப்பூர், திருச்சியில் தலா ஒருவரும் என 21 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. இதுவரையில் 10,423 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து 5 ஆயிரத்து 83 பேர் நேற்று ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 1,349 பேரும், கோவையில் 452 பேரும், சேலத்தில் 327 பேரும், செங்கல்பட்டில் 308 பேரும் அடங்குவர். இதுவரையில் தமிழகத்தில் 6 லட்சத்து 17 ஆயிரத்து 403 பேர் கொரோனாவில் இருந்து பூரண குணம் அடைந்து உள்ளனர். தற்போது சிகிச்சையில் 42 ஆயிரத்து 566 பேர் உள்ளனர். தமிழகத்தில் நேற்று 3-வது நாளாக கொரோனா பாதிப்பு குறைந்தது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story