மக்கள் நீதி மய்யம் கட்சி செயற்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது


மக்கள் நீதி மய்யம் கட்சி செயற்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது
x
தினத்தந்தி 16 Oct 2020 5:14 AM GMT (Updated: 16 Oct 2020 5:14 AM GMT)

சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசிக்க மக்கள் நீதி மய்யம் கட்சியின் செய்ற்குழு கூட்டம் கமல்ஹாசன் தலைமையில் இன்று நடைபெறுகிறது.

சென்னை,

2021 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளைத் தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் இன்று நடைபெறுகிறது. சென்னை பாண்டிபஜாரில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர விடுதியில் அக்கட்சியின் மாநில நிர்வாக மற்றும் செயற்குழு கூட்டம் இன்று காலை 11 மணிக்கு துவங்க உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 30க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், வரும் 2021 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது, கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால் அதில் கட்சியின் நிலைப்பாடு என்ன?, உள்ளாட்சி உரிமைகளை மக்களிடம் இருந்து பறிக்கக்கூடிய தமிழக அரசின் போக்கை எதிர்த்து கண்டன தீர்மானம் நிறைவேற்றுதல், சிறப்பு கிராம சபை கூட்டத்தை கூட்டுவது, கட்சிக்கு தேவையான நிதியை வலுப்பெறச் செய்வது, தேர்தல் அறிக்கை தயரிப்பது மற்றும் வேட்பாளர்காள் தேர்வு உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

மக்கள் நீதி மய்யம் கட்சி கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும், 22 சட்டமன்ற தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டது. அதில் 1 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றிருந்தது. குறிப்பாக கோவை, தென் சென்னை, வட சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலான வாக்குகளை அக்கட்சி பெற்றுள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் மக்கள் நீதி மய்யம் கட்சி தனது கட்டமைப்பை வலுப்படுத்தி வருகிறது. இதன் காரணமாக வரும் சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடலாமா? அல்லது பிற கட்சிகளுடன் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதா? என்று இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.

Next Story