உயர் வகுப்பு ஏழைகளுக்கான 10 சதவீத இடஒதுக்கீடு: மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்


உயர் வகுப்பு ஏழைகளுக்கான 10 சதவீத இடஒதுக்கீடு: மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 22 Oct 2020 7:49 PM GMT (Updated: 22 Oct 2020 7:49 PM GMT)

உயர் வகுப்பு ஏழைகளுக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை, 

பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பாரத ஸ்டேட் வங்கியின் ஜூனியர் அசோசியேட் எனப்படும் எழுத்தர் நிலையிலான பணிக்கு நடத்தப்பட்ட முதல்நிலைத் தேர்வில், இட ஒதுக்கீட்டுப் பிரிவினரை விட குறைந்த மதிப்பெண் பெற்ற உயர்வகுப்பு ஏழைகள் முதன்மைத் தேர்வுக்கு தேர்ச்சி பெற்றுள்ளனர். உயர்வகுப்பு ஏழைகளுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு மத்திய அரசுத் தரப்பில் கூறப்பட்ட காரணங்களில் மிகவும் முக்கியமானது, அவர்களுக்கு திறமையிருந்தும் பிற வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுவதால், அவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் போதிய அளவுக்கு வாய்ப்புகள் கிடைப்பதில்லை என்பது ஆகும். ஆனால், இப்போது தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர் ஆகியோரைவிட மிகக்குறைந்த மதிப்பெண்களை பெற்றுள்ள போதிலும், அவர்கள் முதன்மைத் தேர்வுக்கு தேர்ச்சி பெற்றுள்ளனர்.

எந்த விதமான சமூக ஆய்வும், புள்ளி விவரங்களும் இல்லாமல் வழங்கப்பட்ட உயர்வகுப்பு ஏழைகளுக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு பிற பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியினருக்கான சமூக நீதியை பறிக்கின்றன என்பதற்கு இதை விட வேறு ஆதாரங்கள் தேவையில்லை. எனவே, கல்வி-வேலைவாய்ப்புகளில் உயர்வகுப்பு ஏழைகளுக்கு வழங்கப்பட்டுள்ள 10 சதவீத இடஒதுக்கீட்டை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story