தமிழகத்தில் வட மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல் + "||" + Chance of rain in the northern districts of Tamil Nadu today - Meteorological Center Information
தமிழகத்தில் வட மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் வட மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது தாழ்வு மண்டலமாக நிலைக்கொண்டு இருக்கிறது. இதன் காரணமாக தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக சில இடங்களில் கனமழையும், பல இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்து வருகிறது.
அந்த வகையில் வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் அதனோடு சேர்த்து வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் நிலவுவதால் வட தமிழகத்தில் சில மாவட்டங்களில் குறிப்பாக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சீபுரம், வேலூர், ராணிப்பேட்டையிலும், கடலோர மாவட்டங்களிலும் இன்று (வெள்ளிக்கிழமை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்றும் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில், வனமாதேவி 7 செ.மீ., சூலகிரி 6 செ.மீ., ஓசூர், கடலூர், மரக்காணம், கலசப்பாக்கம் தலா 5 செ.மீ., போளூர், செய்யூர், எஸ்.ஆர்.சி. குடிதாங்கி தலா 4 செ.மீ. உள்பட சில இடங்களில் மழை பெய்து இருக்கிறது.