தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்


தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
x
தினத்தந்தி 26 Oct 2020 8:24 AM GMT (Updated: 26 Oct 2020 8:24 AM GMT)

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை,

இது குறித்து சென்னை வானிலை ஆய்வுமையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகக் கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

நெல்லை, தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்ஸியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்ஸியசையும் ஒட்டி பதிவாகக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை பெய்த விவரம்:-

பட்டுக்கோட்டை, திருமயம் தலா 5 செ.மீ மழையும், உசிலம்பட்டி, ஒரத்தநாடு தலா 4 செ.மீ மழையும், ஆலங்குடி 3 செ.மீ மழையும், மதுரை விமான நிலையம், முத்துப்பேட்டை, சிவகிரி, தளி, ஜெயன்கொண்டம் தலா 2 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story