வெளிமாநிலங்களில் இருந்து வந்த 10 பேருக்கு தொற்று தமிழகத்தில் 14 ஆயிரத்து 470 பேருக்கு கொரோனா சிகிச்சை


வெளிமாநிலங்களில் இருந்து வந்த 10 பேருக்கு தொற்று தமிழகத்தில் 14 ஆயிரத்து 470 பேருக்கு கொரோனா சிகிச்சை
x
தினத்தந்தி 18 Nov 2020 8:36 PM GMT (Updated: 18 Nov 2020 8:36 PM GMT)

தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி 14 ஆயிரத்து 470 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். வெளிமாநிலங்களில் இருந்து வந்த 10 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

சென்னை, 

தமிழகத்தில் நேற்று 66 ஆயிரத்து 244 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 1,052 ஆண்கள், 662 பெண்கள் என மொத்தம் 1,714 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் வெளிமாநிலங்களான, பீகாரில் இருந்து வந்த 6 பேருக்கும், மேற்கு வங்காளத்தில் இருந்து வந்த இருவருக்கும், கர்நாடகா, இமாசலபிரதேசத்தில் இருந்து வந்த தலா ஒருவரும் என 10 பேரும், 12 வயதுக்கு உட்பட்ட 45 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 317 முதியவர்களும் இடம்பெற்றுள்ளனர். நேற்று அனைத்து மாவட்டங்களிலும் புதிய தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக சென்னையில் 479 பேரும், கோவையில் 162 பேரும், செங்கல்பட்டில் 129 பேரும், குறைந்தபட்சமாக பெரம்பலூரில் 2 பேரும், அரியலூரில் ஒருவரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். தமிழகத்தில் இதுவரை 1 கோடியே 9 லட்சத்து 82 ஆயிரத்து 766 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 7 லட்சத்து 63 ஆயிரத்து 282 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 4 லட்சத்து 61 ஆயிரத்து 157 ஆண்களும், 3 லட்சத்து 2 ஆயிரத்து 92 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 33 பேரும் அடங்குவர். அதில் 12 வயதுக்கு உட்பட்ட 26 ஆயிரத்து 903 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 96 ஆயிரத்து 777 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

18 பேர் உயிரிழப்பு

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 8 பேரும், தனியார் மருத்துவமனையில் 10 பேரும் என 18 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர். இதில் சென்னையில் 5 பேரும், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, திருப்பூர், காஞ்சீபுரத்தில் தலா இருவரும், வேலூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திண்டுக்கல், கோவையில் தலா ஒருவரும் என 10 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்து உள்ளது. இதுவரையில் தமிழகத்தில் 11 ஆயிரத்து 531 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானம் மூலம் வந்த 925 பேரும், வெளிமாவட்டங்களில் இருந்து விமான மூலம் வந்த 989 பேரும், ரெயில் மூலம் வந்த 428 பேரும், சாலை மார்க்கமாக வந்த 4 ஆயிரத்து 349 பேரும், கடல் மார்க்கமாக வந்த 34 பேரும் என மொத்தம் 6 ஆயிரத்து 725 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

2,311 பேர் ‘டிஸ்சார்ஜ்’

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 2 ஆயிரத்து 311 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 608 பேரும், கோவையில் 205 பேரும், செங்கல்பட்டில் 156 பேரும் அடங்குவர். இதுவரையில் 7 லட்சத்து 37 ஆயிரத்து 281 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 14 ஆயிரத்து 470 பேர் உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story