கோவை விமான நிலையத்தில் கூடுதலாக 7 விமானங்களை நிறுத்தும் வசதி - விமான நிலைய இயக்குனர் தகவல்


கோவை விமான நிலையத்தில் கூடுதலாக 7 விமானங்களை நிறுத்தும் வசதி - விமான நிலைய இயக்குனர் தகவல்
x
தினத்தந்தி 19 Nov 2020 7:27 AM GMT (Updated: 19 Nov 2020 7:27 AM GMT)

கோவை விமான நிலையத்தில் கூடுதலாக 7 விமானங்களை நிறுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்கான கட்டுமான பணி நிறைவடைய உள்ளது என்று விமான நிலைய இயக்குனர் மகாலிங்கம் தெரிவித்துள்ளார்.

கோவை,

கோவை சர்வதேச விமான நிலையம், கோவை உள்ளிட்ட சுற்றுப்புறங்களை சேர்ந்த 7 மாவட்ட மக்களுக்கு பயனளித்து வருகிறது. விமான நிலைய விரிவாக்கத்தை செயல்படுத்துவதில் மிகுந்த காலதாமதம் நிலவி வரும் நிலையிலும் பயணிகள் போக்குவரத்து, விமானங்கள் இயக்கம், சரக்கு போக்குவரத்தை கையாளுதல் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் நிலையான வளர்ச்சியை விமான நிலையம் தக்கவைத்துள்ளது.

கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக ஏற்பட்ட தாக்கத்தில் இருந்து மெதுவாக விமான போக்குவரத்து மீண்டு சுறுசுறுப்படைந்து வருகிறது. விமான நிலையத்தின் எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு தற்போது இருக்கும் இடத்தில் பல்வேறு மேம்பாட்டு பணிகளை விமான நிலைய நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக ஏற்கனவே விமானநிலையத்தில் பயன்படுத்தி வந்த 2 ஏரோ பிரிட்ஜ் (விமானங்களில் பயணிகள் ஏறி இறங்க பயன்படுத்தப்படும் எந்திரம்) மாற்றியமைக்கப்பட்டன.விமான நிறுத்தமிடங்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டு கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு, அவை நிறைவடையும் நிலையில் உள்ளது. இந்த நடவடிக்கைகளால் விமான நிலையம் புதுப்பொலிவு பெற்றுள்ளது.

இது குறித்து கோவை சர்வதேச விமான நிலைய இயக்குனர் ஆர்.மகாலிங்கம் கூறியதாவது:-

விமான நிலையத்தில் ஏற்கெனவே பல ஆண்டுகள் பயன்படுத்திய காரணத்தால் 2 ஏரோ பிரிட்ஜ் புதிதாக மாற்றப்பட்டன. தற்பொழுது கூடுதலாக மேலும் 2 ஏரோ பிரிட்ஜ் வாங்கப்பட்டு ஏரோ பிரிட்ஜ் வாங்கப்பட்டு அவை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

விமானங்கள் நிறுத்துமிடம் கட்டுமானம் பொருத்தவரை ஏற்கனவே 9 ‘ஏப்ரான்‘ உள்ளன. தற்போது கூடுதலாக 7 விமானங்கள் நிறுத்தும் வசதி செய்யப்படுகிறது. இதற்கான இடம் கட்டப்பட்டுள்ளன. இவற்றில் 5 “ஏர்பஸ் 320“ வகையை சேர்ந்த பெரிய விமானங்கள் நிறுத்துவதற்கும் மற்ற இரண்டு “ஏ.டி.ஆர்“ என்று சொல்லக்கூடிய சிறிய வகை விமானங்கள் நிறுத்துவதற்கும் பயன்படுத்தப்படும். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கட்டுமான பணிகள் பணிகள் பாதிக்கப்பட்டன. தற்பொழுது அனைத்து பணிகளும் நிறைவடையும் தருவாயில் உள்ளன. மிக விரைவில் இவை செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story