தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இயக்கப்பட்ட சிறப்புப் பேருந்துகளில் 13,24,553 பேர் பயணம்


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இயக்கப்பட்ட சிறப்புப் பேருந்துகளில் 13,24,553 பேர் பயணம்
x
தினத்தந்தி 20 Nov 2020 7:08 AM GMT (Updated: 20 Nov 2020 7:08 AM GMT)

தீபாவளித் திருநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இயக்கப்பட்ட 28 ஆயிரத்து 360 பேருந்துகள் வாயிலாக 13 லட்சத்து 24 ஆயிரத்து 553 பயணிகள் பயணம் செய்துள்ளனர். முன்பதிவு வாயிலாக ரூ.5 கோடியே 84 லட்சம் வருவாய் வந்துள்ளதாக போக்குவரத்துக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

இதுகுறித்துப் போக்குவரத்துக் கழக இணை இயக்குனர் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

'தீபாவளித் திருநாளை முன்னிட்டு பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்கின்ற வகையில் ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் சிறப்புப் பேருந்துகள் தமிழகம் முழுவதும் இயக்கப்பட்டு வருகின்றன. தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு தங்களின் சொந்த ஊருக்குச் செல்கின்ற பொதுமக்களின் நலனைப் பாதுகாக்கும் வகையில் அரசு செயல்படுத்தி வருகிறது.

அதில் கூறப்பட்டுள்ள வழிகாட்டுதல்களான கட்டாயம் முகக்கவசம், வெப்பமானி மூலம் பரிசோதனை, கிருமிநாசினி மூலம் கைகளைச் சுத்தம் செய்வது உள்ளிட்ட அரசு செயல்படுத்தியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி இந்தப் பண்டிகைக்கு பேருந்துகளை இயக்க போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உத்தரவிட்டதன் அடிப்படையில் பேருந்துகள் தொடர்ந்து இயக்கப்பட்டன. இது பொதுமக்களிடம் நல்ல வரவேற்பினைப் பெற்றது.

தீபாவளித் திருநாளை முன்னிட்டு பொதுமக்கள் சிரமமின்றி சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்யவும், பண்டிகை முடிந்து சென்னை மற்றும் பிற ஊர் திரும்பும் வகையில் சிறப்புப் பேருந்துகளை இயக்க முதல்வர் உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து நவம்பர் 11, 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் சென்னையில் 6 இடங்களில் இருந்து மொத்தம் 8 ஆயிரத்து 753 பேருந்துகள் இயக்கப்பட்டு 3 லட்சத்து 97 ஆயிரத்து 553 பயணிகள் சொந்த ஊர் சென்றனர்.

மேலும் பல்வேறு பகுதிகளில் இருந்து மற்ற ஊர்களுக்கு 4 ஆயிரத்து 664 பேருந்துகள் இயக்கப்பட்டு 2 லட்சத்து 88 ஆயிரம் பயணிகள் பயணித்தனர். மொத்தம் 13 ஆயிரத்து 317 பேருந்துகள் வாயிலாக 6 லட்சத்து 25 ஆயிரத்து 553 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

தீபாவளிப் பண்டிகை முடிந்த பின்னர் கடந்த நவம்பர் 15, 16, 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பல்வேறு ஊர்களில் இருந்து சென்னைக்கு 10,714 பேருந்துகள் இயக்கப்பட்டு 4 லட்சத்து 68 ஆயிரம் பயணிகளும், பல்வேறு இடங்களிலிருந்து மற்ற பிற ஊர்களுக்கு 4 ஆயிரத்து 629 பேருந்துகள் இயக்கப்பட்டு 2 லட்சத்து 31 ஆயிரம் பயணிகளும் என மொத்தமாக 15 ஆயிரத்து 43 பேருந்துகள் வாயிலாக 6 லட்சத்து 99 ஆயிரம் பயணிகள் பயணம் செய்தனர்.

இந்த வருட தீபாவளித் திருநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கடந்த 7 நாட்களில் மொத்தமாக 28 ஆயிரத்து 360 பேருந்துகள் வாயிலாக 13 லட்சத்து 24 ஆயிரத்து 553 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 21 ஆயிரம் பயணிகள் முன்பதிவு செய்து பயணம் செய்துள்ளனர். இதன் வாயிலாக மொத்தம் 5 கோடியே 84 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது'.

இவ்வாறு மாநகரப் போக்குவரத்துக் கழக இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Next Story