ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிக்கும் அவசர சட்டத்திற்கு தமிழக ஆளுநர் ஒப்புதல்


ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிக்கும் அவசர சட்டத்திற்கு தமிழக ஆளுநர் ஒப்புதல்
x
தினத்தந்தி 20 Nov 2020 4:26 PM GMT (Updated: 20 Nov 2020 4:26 PM GMT)

ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிக்கும் அவசர சட்டத்திற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார்.

சென்னை,

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் இதற்கு எந்த தடைகளும் இல்லாத நிலையில், இளைஞர்கள் ஆன்லைன் ரம்மி, சூதாட்டம் உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடி வருகின்றனர். 

பலர் இதனை பொழுதுபோக்கிற்காக விளையாட ஆரம்பித்து பின்னர் பெரும் அளவில் பணத்தை இழந்துவிடுகின்றனர். இதனால் சில இளைஞர்கள் கடன் தொல்லைக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தமிழகத்தில் அதிகரித்து வருகின்றன. எனவே ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை தடை செய்ய பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனை விசாரித்த நீதிமன்றம் ஆன்லைன் ரம்மியைத் தடை செய்வது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து ஆன்லைன் சூதாட்டம், ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளை தடை செய்யும் அவசர சட்டம் ஒன்றை தமிழக அரசு பிறப்பித்தது.

இந்நிலையில் தமிழக அரசின் அவரச சட்டத்திற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று ஒப்புதல் அளித்தார். இந்த அவசர சட்டத்தின்படி, ஆன்லைன் ரம்மி விளையாட்டு அரங்கம் வைத்திருந்தால் ரூ.10,000 அபராதமும் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் விதிக்கப்படும். பணம் வைத்து விளையாடுவோரின் கணினி, செல்போன் மற்றும் அது தொடர்பான உபகரணங்கள் பறிமுதல் செய்யப்படும். தடையை மீறி விளையாடினால் ரூ.5,000 அபராதம் விதிக்கவும், 6 மாதம் சிறை தண்டனை வழங்கவும் இந்த சட்டம் வகை செய்கிறது.

Next Story