நான் தற்கொலைக்கு முயன்றேன் என்று வதந்தி பரப்ப வேண்டாம்; பூங்கோதை முகநூல் பதிவு


நான் தற்கொலைக்கு முயன்றேன் என்று வதந்தி பரப்ப வேண்டாம்;  பூங்கோதை முகநூல் பதிவு
x
தினத்தந்தி 20 Nov 2020 8:23 PM GMT (Updated: 20 Nov 2020 8:23 PM GMT)

வதந்திகளைப் பரப்பி என்னை வளர்த்துள்ள தி.மு.க.வுக்கு களங்கம் ஏற்படுத்திட வேண்டாம் என பூங்கோதை தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

சென்னை, 

தி.மு.க. முன்னாள் அமைச்சரும், ஆலங்குளம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான டாக்டர் பூங்கோதை (வயது 56) உடல்நலக்குறைவு காரணமாக நெல்லையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். தி.மு.க. உட்கட்சி பிரச்சினை காரணமாக அவர் தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியானது. இந்த தகவலை பூங்கோதை மறுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ‘முகநூல்’ பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

19-ந்தேதி அன்று காலை ஆலங்குளத்தில் காலை 6 மணியளவில் உடல்நலக்குறைவு காரணமாக மயங்கி விழுந்து என்னுடைய பணியாளர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்த்துள்ளார்கள். ரத்த பரிசோதனையில் என் உடலில் ரத்தம் உறையும் தன்மை குறைவாகவும், சர்க்கரை அளவு குறைவாகவும் இருந்தது கண்டறியப்பட்டு மூளை, நெஞ்சு சி.டி ஸ்கேன் எடுக்கப்பட்டு தக்க சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

நடந்த இந்த உண்மைச் சம்பவத்தை மறைத்து தவறாக திரித்து நான் ஏதோ தற்கொலை முயற்சி செய்துகொண்டது போல் ஊடகங்கள் பொய்யுரை பரப்புவது மிகுந்த வேதனை அளிக்கிறது

எனக்கு மட்டுமல்ல, என் தந்தைக்கும் எனக்கும் முகவரியும் முன்னேற்றமும் தந்தது இந்த மாபெரும் ஜனநாயக இயக்கமான தி.மு.க., ஆகவே எனக்கு மருத்துவரீதியாக ஏற்பட்ட உடல்நலக்குறைவு குறித்து தயவுகூர்ந்து இத்தகைய தவறான வதந்திகளைப் பரப்பி என்னை வளர்த்துள்ள தி.மு.க.வுக்கு களங்கம் ஏற்படுத்திட வேண்டாம் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story