அடுத்த 24 மணி நேரத்தில் உருவாகும் “நிவர் புயல்” - வானிலை ஆய்வு மையம்


அடுத்த 24 மணி நேரத்தில் உருவாகும் “நிவர் புயல்” - வானிலை ஆய்வு மையம்
x
தினத்தந்தி 23 Nov 2020 2:52 AM GMT (Updated: 23 Nov 2020 2:52 AM GMT)

அடுத்த 24 மணி நேரத்தில் “நிவர் புயல்” உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை, 

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் நிவர் புயலாக வலுப்பெறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

தாழ்வு மண்டலம் சென்னையிலிருந்து 740 கிலோமீட்டர் , புதுச்சேரியில் இருந்து 700 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. நிவர் புயல் நாளை மறுநாள் பிற்பகல் மாமல்லபுரம் – காரைக்கால் இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளது. 

வங்க கடலில் புயல் உருவாகி உள்ளதால் தமிழகம்,புதுச்சேரி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. ராமநாதபுரம், நாகை, புதுச்சேரி மீனவர்கள் தங்களது படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். நிவர் புயலின் தாக்கத்தினால் இன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால் ஆகிய இடங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து எண்ணூர், கடலூர், காரைக்கால், நாகை, பாம்பன் துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.பி. உதயகுமார் செய்தியாளர்கள் சந்திப்பில், “தமிழகம் அருகே வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்தத் தாழ்வு பகுதி இப்போது தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. 24 மணி நேர கட்டுப்பாட்டு மையம் உருவாக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. மழையை எதிர்கொள்ளும் வகையில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. மாநில அளவில் 4136 இடங்கள் வெள்ள அபாய பகுதிகளாகக் கண்டறியப்பட்டு அங்கு தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்கள் தங்குவதற்கு தற்காலிக முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. பொதுமக்கள் அந்தந்த மாவட்ட நிர்வாகத்துக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

Next Story