கரையை கடந்த பிறகு ‘நிவர்’ புயல் சென்ற பாதை
கரையை கடந்த பின்னர் ‘நிவர்’ புயல் வடமேற்கு திசை நோக்கி நகரத் தொடங்கியது.
சென்னை,
வங்க கடலில் கடந்த 21-ந் தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாகவும், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அதனைத் தொடர்ந்து புயலாகவும், தீவிர புயலாகவும், அதி தீவிர புயலாகவும் வலுப்பெற்றது. இதற்கு ‘நிவர்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருந்தது.
இந்த ‘நிவர்’ புயல் புதுச்சேரிக்கும்-மரக்காணத்துக்கும் இடையே நேற்று முன்தினம் இரவு கரையை கடக்க தொடங் கியது. இரவு 11.30 மணி முதல் அதிகாலை 2.30 மணி வரை அதி தீவிர புயலின் முழுப்பகுதியும் புதுச்சேரி அருகே கரையை கடந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
புயல் கரையை கடந்த பிறகு அதிகாலை 2.30 மணி அளவில் சற்று வலுவிழந்து, தீவிர புயலாக மாறியது. பின்னர் அது வடமேற்கு திசை நோக்கி நகரத் தொடங்கியது. நேற்று இரவு 9 மணி நிலவரப்படி திருப்பதிக்கு மேற்கே, தென்மேற்கே 40 கி.மீ. தொலைவில் நிலைகொண்டிருந்தது. இது வடக்கு நோக்கி நகர்ந்து, ஆந்திராவில் காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவிழந்து போகிறது.
கரையை கடந்த பிறகு ‘நிவர்’ புயல் சென்ற பாதை பின்வறுமாறு;-
* நேற்று அதிகாலை 2.30 மணிக்கு ‘நிவர்’ புயல் கரையை கடந்தது.
* மேற்கு வடமேற்காக நகர்ந்து, நேற்று காலை 5.30 மணி முதல் 6.30 மணிக்குள் வந்தவாசி அருகே நிலைக்கொண்டிருந்தது.
* பின்னர், படிப்படியாக நகர்ந்து பிற்பகல் 2.30 மணியளவில் வேலூருக்கு கிழக்கே மையமிட்டு இருந்தது.
* இரவு 9 மணி நிலவரப்படி திருப்பதிக்கு மேற்கே நிலைக்கொண்டிருந்தது.
* இன்று காலையோ, அல்லது மாலைக்குள்ளோ ஆந்திராவில் காற்றழுத்த தாழ்வுபகுதியாக வலுவிழக்கிறது.
Related Tags :
Next Story