மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் அரசியல் நிலைப்பாடு குறித்து ரஜினி ஆலோசனை
நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து இறுதி முடிவு எடுக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
சென்னை,
கொரோனா பரவல் காரணமாகவும், உடல் நலம் கருதியும் நடிகர் ரஜினிகாந்த், அரசியல் கட்சி துவக்க மாட்டார் என, சமூக வலைதளங்களில் அவரின் பெயரில் அறிக்கை ஒன்று வெளியானது. அந்த அறிக்கைக்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என மறுத்த ரஜினிகாந்த், அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள சில தகவல்கள் உண்மையானவை என ஒப்புக் கொண்டார்.
இதனால், ரஜினி கட்சி துவக்குவாரா மாட்டாரா என்ற கேள்வி, அரசியல் வட்டாரங்களில் எழுந்தது. அதற்கு பதில் அளிக்கும் விதமாக, அரசியல் நிலைப்பாடு குறித்து, மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவை அறிவிப்பேன் என டுவிட்டர் வாயிலாக, ரஜினி தெரிவித்திருந்தார்.
அதன்படி, சென்னை, கோடம்பாக்கம், ராகவேந்திரா திருமண மண்டபத்தில், மக்கள் மன்ற மாவட்ட செயலர்களுடன், ரஜினி இன்று ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க போயஸ் இல்லத்தில் இருந்து புறப்பட்ட நடிகர் ரஜினிகாந்திற்கு வீட்டு முன் திரண்டு இருந்த ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ராகவேந்திரா மண்டபம் வருகை தந்த ரஜினிகாந்த் உடனடியாக மன்ற ரசிகர்களுடனான ஆலோசனையை தொடங்கினார். 37 மாவட்ட நிர்வாகிகளுடன் தனித்தனியாக ரஜினிகாந்த் ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
Related Tags :
Next Story