மணிக்கு 12 கி.மீ வேகத்தில் புரெவி புயல் நகர்ந்து வருகிறது - இந்திய வானிலை மையம்


மணிக்கு 12 கி.மீ வேகத்தில் புரெவி புயல் நகர்ந்து வருகிறது - இந்திய வானிலை மையம்
x
தினத்தந்தி 2 Dec 2020 2:50 AM GMT (Updated: 2 Dec 2020 2:50 AM GMT)

வங்க கடலில் நேற்று உருவான புரெவி புயல் கன்னியாகுமரிக்கும், பாம்பனுக்கும் இடையே நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) கரையை கடக்கிறது.

சென்னை,

வங்க கடலில் கடந்த 24-ந்தேதி நிவர் புயல் உருவாகி, மறுநாள் அதிகாலை 2.30 மணியளவில் புதுச்சேரிக்கும், மரக்காணத்துக்கும் இடையே கரையை கடந்தது. இதனால் வடமாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. அதன் தொடர்ச்சியாக மீண்டும் வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. 

இது தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில், நேற்று தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் உருவெடுத்தது. இதையடுத்து நேற்று இரவு தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

இந்த புயலுக்கு ‘புரெவி’ என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. புரெவி புயல், பாம்பனுக்கு தென்கிழக்கே 530 கி.மீ தொலைவிலும், குமரிக்கு தென்கிழக்கே 700 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. இலங்கை திரிகோணமலைக்கு தென்கிழக்கில் 300 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. 

கடந்த 6 மணி நேரத்தில், மணிக்கு 12 கி.மீ வேகத்தில் புரெவி புயல் நகர்ந்து வருகிறது. புரெவி புயல், இலங்கையின் திருகோணமலையில் இன்று கரையை கடக்க வாய்ப்பு உள்ளது. புயல் கரையைக் கடக்கும் போது 75- 85 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். 

இந்த புயலானது  3-ந்தேதி (நாளை) மன்னார் வளைகுடா பகுதியைக் கடந்து, 4-ந்தேதி (நாளை மறுதினம்) தென் தமிழகத்தில் கன்னியாகுமரிக்கும், பாம்பனுக்கும் இடையே  கரையை கடக்க வாய்ப்பு இருக்கிறது. இந்தத் தகவலை இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Next Story