2021-ம் ஆண்டுக்கான அரசு பணியாளர் தேர்வாணையத்தின் ஆண்டு திட்ட பட்டியல் வெளியீடு


2021-ம் ஆண்டுக்கான அரசு பணியாளர் தேர்வாணையத்தின் ஆண்டு திட்ட பட்டியல் வெளியீடு
x
தினத்தந்தி 17 Dec 2020 7:41 PM GMT (Updated: 17 Dec 2020 7:41 PM GMT)

2021-ம் ஆண்டுக்கான அரசு பணியாளர் தேர்வாணையத்தின் திட்ட பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் குரூப்-4 பதவிக்கான அறிவிப்பு செப்டம்பர் மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, 

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஒவ்வொரு ஆண்டும் அரசு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு எவ்வப்போது அறிவிப்புகள் வெளியாகும் என்ற ஆண்டு திட்ட பட்டியலை வெளியிடும். அந்தவகையில் 2021-ம் ஆண்டுக்கான ஆண்டு திட்ட பட்டியலை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நேற்று வெளியிட்டது.

அதில், ‘2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை எந்தெந்த பதவிகளுக்கு எப்போது அறிவிப்பு வெளியாகும் என்ற தகவல் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அரசு பணியாளர் தேர்வாணையத்தின் ஆண்டு திட்ட பட்டியலில், பெரும்பாலானோர் கலந்துகொண்டு தேர்வு எழுதக்கூடிய ஒருங்கிணைந்த குரூப்-2, குரூப்-2 ஏ பதவிகளுக்கான அறிவிப்பு அடுத்த ஆண்டு மே மாதத்திலும், ஒருங்கிணைந்த குரூப்-4 பதவிகள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான அறிவிப்பு செப்டம்பர் மாதத்திலும் வெளியாகிறது என கூறப்பட்டுள்ளது.

இதுதவிர அரசின் பல்வேறு துறைகளில் உள்ள பதவிகளுக்கான அறிவிப்பு குறித்த தகவலும் அதில் இடம் பெற்றுள்ளது. இந்த பட்டியலில் குரூப்-1 பதவிக்கான அறிவிப்பு இடம்பெறாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது. இது தவிர அந்த பட்டியலில் 2019-20-ம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட அறிவிப்பாணைப்படி வருகிற ஜனவரி மாதம் 3-ந் தேதி ஒருங்கிணைந்த குரூப்-1 பதவிக்கான எழுத்துத்தேர்வு நடைபெற இருக்கிறது என்றும், அதேபோல் வணிகம், தொழில்துறையின் உதவி இயக்குனர் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறையின் உதவி மேற்பார்வையாளர் பதவிக்கு ஜனவரி மாதம் 9, 10-ந் தேதிகளில் தேர்வு நடைபெற உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு www.tnpsc.gov.in என்ற அரசு பணியாளர் தேர்வாணையத்தின் இணைய தளத்தில் சென்று தெரிந்துகொள்ளலாம். கொரோனா தொற்று காரணமாக 2020-ம் ஆண்டு திட்ட பட்டியல்படி அறிவிப்பு எதையும் அரசு பணி யாளர் தேர்வாணையம் வெளியிடவில்லை. எனவே அந்த அறிவிப்பில் இருந்த காலிப்பணி யிடங்களுடன், 2021-ம் ஆண்டு அறிவிப்பின் போது இருக்கும் காலிப்பணி இடங்களுடன் சேர்த்து அறிவிப்பு வெளியிடப் படுமா என்பது தேர்வர்கள் பல ரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Next Story