ரஜினிகாந்த் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் - அமைச்சர் பாண்டியராஜன் வேண்டுகோள்


ரஜினிகாந்த் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் - அமைச்சர் பாண்டியராஜன் வேண்டுகோள்
x
தினத்தந்தி 29 Dec 2020 7:58 PM GMT (Updated: 29 Dec 2020 7:58 PM GMT)

ரஜினிகாந்த் அ.தி.மு.க. வுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று அமைச்சர் பாண்டியராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு மாவட்டம் நெடுங்குன்றம் ஊராட்சியில் உள்ள கொளப்பாக்கம் கிராமத்தில் கால்நடை கிளை நிலையம் இயங்கி வந்தது. இதன் மூலம் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பயன் பெற்று வந்தனர்.

இந்த நிலையில் கிளை கால்நடை நிலையத்தை தமிழக அரசு கால்நடை மருந்தகமாக தரம் உயர்த்தியது. தரம் உயர்த்தப்பட்ட கால்நடை மருந்தகத்தின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதற்கு செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ் தலைமை தாங்கினார். செங்கல்பட்டு மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ராஜேந்திரன், காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் ரத்தினமங்கலம் கஜா என்கிற கஜேந்திரன், மண்டல கால்நடை இணை இயக்குனர் கலா, உதவி இயக்குனர் புகழேந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழ் ஆட்சி மொழி, தமிழ் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் புதிய கால்நடை மருந்தகத்தை ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார்.

இதில் தாம்பரம் ஆர்.டி.ஓ. ரவிச்சந்திரன் வண்டலூர் தாசில்தார் செந்தில், ஊனை லட்சுமணன், நெடுங்குன்றம் ரங்கன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வேங்கடமங்கலம் ரவி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் எஸ்.தேவதாஸ், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் பாண்டியராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

ரஜினிகாந்த் நல்ல மனிதர், அவர் உடல்நிலையை நல்லபடியாக பாத்து கொள்ளவேண்டும். அவர் தமிழகத்தின் சொத்து, தமிழகத்தில் மிக சிறந்த மனிதர்களிலே அவர் ஒருவர். எம்.ஜி.ஆர். அரசு அமைப்பது என்று அவர் சொன்னார். எம்.ஜி.ஆர். அரசாகவே நடந்து கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு அவர் ஆதரவு அளிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

அவர் எப்போதும் சொன்ன வார்த்தையை காப்பாற்ற கூடியவர். அவர் நீடூழி வாழ வேண்டும். ரஜினி ரசிகர்கள் விரும்பியதும் அதுவே. கட்சியை கடந்து எல்லோருடைய எண்ணமும் அதுவாகவே இருந்தது. அவர் ஏதோ ஒரு வகையில் வாய்ஸ் தர வேண்டும் என்று நினைத்தார். அந்த வாய்ஸ் எம்.ஜி.ஆர். ஆட்சி தொடருவதற்கான வாய்சாக இருக்க வேண்டும். அவர் ஆதரவு கரம் நீட்டினால் அது அ.தி.மு.க.வுக்கு மட்டுமே இருக்கும் என்பது என்னுடைய நம்பிக்கை.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story