மு.க.ஸ்டாலின் கலந்து கொண்ட திமுக கிராம சபை கூட்டத்தில் பெண்ணால் சலசலப்பு ; திமுக- அதிமுக போட்டி சாலை மறியல்


மு.க.ஸ்டாலின் கலந்து கொண்ட  திமுக கிராம சபை கூட்டத்தில் பெண்ணால் சலசலப்பு ; திமுக- அதிமுக போட்டி சாலை மறியல்
x
தினத்தந்தி 2 Jan 2021 7:59 AM GMT (Updated: 2 Jan 2021 10:00 AM GMT)

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற கிராம சபை கூட்டத்தில் ஒரு பெண் எழுப்பிய சலசலப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு திமுக அதிமுக போட்டி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கோவை

கோவை மாவட்டம் தேவராயபுரம் ஊராட்சியில் நடைபெறும் மக்கள் கிராம சபை கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழகத்திலேயே கோவையில்தான் அதிக முறைகேடுகள் நடைபெறுகிறது. கிராம சபை கூட்டத்தை தடுத்தாலும், மக்களை சந்திப்பதை தடுக்க முடியாது.அதிமுக ஆட்சிக்காலத்தில் ஒருமுறை கூட கிராம சபை கூட்டம் நடத்தப்படவில்லை.12,600க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் மக்கள் கிராம சபை கூட்டத்தை நடத்த திமுக திட்டமிட்டுள்ளது

திமுக தேர்தல் அறிக்கையில் மிக முக்கிய அங்கமாக ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை இருக்கும் .  திமுக ஆட்சி அமைந்த பிறகு, விசாரணை நடத்தி தண்டனை வாங்கி கொடுப்பது உறுதி.மக்கள் சபை கூட்டத்தில் பெண்கள் அதிகளவில் பங்கேற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது  என கூறினார்.

பின்னர் கூட்டத்தில் இருந்த மக்களிடம் ஸ்டாலின் குறைகளைக் கேட்டறிந்தார். அப்போது, விவசாயிகளின் கடன்களை ரத்து செய்ய வேண்டும். நீர்வளத்தை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர்.

இந்நிலையில், கூட்டத்தில் இருந்து எழுந்த பெண் ஒருவர் கிராம சபைக் கூட்டத்தை எதற்கு நடத்துகிறீர்கள்என ஸ்டாலினிடம் கேட்டார். அப்போது, நீங்கள் எந்த ஊர் என அவர் கேட்டதைத் தொடர்ந்து மைல்கல் என பெண் கூறினார். இதைடுத்து, அது எந்த சட்டப்பேரவைத் தொகுதியில் வருகிறது என ஸ்டாலின் கேட்டார்.

அப்போது, ஆவேசமடைந்த அந்தப் பெண் இது கூடத் தெரியாமல் தான் நீங்கள்  கிராமசபை கூட்டம் நடத்துகிறீர்களா எனக் கேட்டார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

பின்னர் கிராம சபை கூட்டத்தில் கேள்வி கேட்க முயன்ற பெண் வெளியேற்றப்பட்டார். அவர்  கோஷம் எழுப்பிகொண்டே சென்றார்.

இது குறித்து திமுகவினர் கூறும் போது கேள்வி கேட்க முயன்ற பெண் அமைச்சர் எஸ்பி வேலுமணியால் அனுப்பப்பட்டவர் .கிராம சபை கூட்டத்திற்கு இடையூறு செய்ய வேண்டும் என அனுப்பியுள்ளனர் என கூறினர்.

இதனால் கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் ஸ்டாலினை கண்டித்து அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.   அதிமுகவினருக்கு எதிராக திமுகவினரும் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story