தமிழகம் முழுவதும் நாளை குரூப்-1 தேர்வு நடக்கிறது


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 2 Jan 2021 5:26 PM GMT (Updated: 2 Jan 2021 5:26 PM GMT)

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த சிவில் (குரூப்-1) தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.

சென்னை, 

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த சிவில் (குரூப்-1) தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. 66 காலியிடங்களுக்காக நடத்தப்படும் இத்தேர்வில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொள்கிறார்கள். 

துணை ஆட்சியர் (ஆர்டிஓ), டிஎஸ்பி, ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர், வணிக வரி உதவி ஆணையர், மாவட்டத் தீயணைப்பு அலுவலர் ஆகிய உயர் பதவிகளுக்குத் தேர்வுகள் நடைபெற உள்ளன.

கொரோனா பரவல் காரணமாக தேர்வு மையங்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. நாளை காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெற உள்ளது. 

கொரோனா பரவல் காரணமாக தேர்வுக்கூடங்களில் போதுமான பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. விடைத்தாளில் விவரங்களை பூர்த்தி செய்யவும், விடைகளை குறிக்கவும் கருப்பு நிற மை உடைய பந்து முனை பேனாவை (பால் பாயிண்ட்) மட்டுமே பயன்படுத்த வேண்டும். பென்சில் மற்றும் ஏனைய நிற மை பேனாக்களை பயன்படுத்தக்கூடாது. விடைத் தாளில் உரிய இடங்களில் (இரு இடங்களில்) கையொப்பமிட்டு இடது கைப்பெருவிரல் ரேகையினை பதிக்க வேண்டும்.

வினாத்தாளில் உள்ள கேள்விகளுக்குள் ஏதேனும் கேள்விகளுககு விடை தெரியவில்லையென்றால் விடைத்தாளில் (ஓ.எம்.ஆர்.ஷீட்) இ என்ற வட்டத்தினை கருமையாக்க வேண்டும். விடைத்தாளில் ஒவ்வொரு விடைக்கும் எத்தனை வட்டங்கள் கருமையமாக்கப்பட்டுள்ளன என்று எண்ணி அந்த மொத்த எண்ணிக்கையை உரிய கட்டங்களில் நிரப்பி கருமையாக்கப்பட வேண்டும். இந்த எண்ணிக்கை தவறாகும் பட்சத்தில் தேர்வர் பெறும் மதிப்பெண்களிலிருந்து 5 மதிப்பெண்கள் குறைக்கப்படும். 

இதை செய்வதற்கு மட்டுமே ஒவ்வொரு தேர்வருக்கும் தேர்வு நேரம் முடிவுற்ற பிறகு 15 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்படும். அதாவது மதியம் ஒரு மணி முதல் 1.15 மணி வரை இதை செய்து முடித்து விடைத்தாளினை தேர்வு அறைக் கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும். தேர்வு எழுதுபவர்கள் ஆதார் எண்ணை இணைத்து இணையவழியாக தேர்வு நுழைவுசீட்டினை பதிவிறக்கம் செய்து தேர்வு நடைபெறுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பாக தேர்வு மையங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


Next Story