தபால் வாக்கு அனுமதிக்கு தடை கோரிய வழக்கு; தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு


தபால் வாக்கு அனுமதிக்கு தடை கோரிய வழக்கு; தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
x
தினத்தந்தி 7 Jan 2021 9:24 AM GMT (Updated: 7 Jan 2021 9:24 AM GMT)

வயது முதியோருக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் தபால் வாக்கு அனுமதிக்கு தடை கோரிய வழக்கில் தேர்தல் ஆணையம், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தலில் 80 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்கு செலுத்த வசதி ஏற்படுத்தி தரப்படும் என தலைமை தேர்தல் ஆணைய செயலர் உமேஷ் சின்கா அண்மையில் அறிவித்தார். விருப்பப்படும் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இந்த வசதியை பயன்படுத்தலாம் என்றும் கூறினார்.

இந்த புதிய திட்டத்திற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில், தபால் வாக்கை வாக்குச்சாவடி அதிகாரி நேரில் சென்று பெற வேண்டும் என்பதால் இதில் முறைகேடு நடக்க வாய்ப்பு உள்ளது என்பதால் இந்த திட்டத்தை ரத்து செய்ய உத்தரவிடவேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இந்த மனு மீதனா விசாரணை கடந்த மாதம் 23 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது,  திமுகவின் மனுவை பரிசீலனை செய்த நீதிபதிகள், விசாரணையை ஜனவரி 7ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இந்த நிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தபால் வாக்கு அனுமதிக்கு தடை கோரிய வழக்கில் தேர்தல் ஆணையம் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி 4 வாரங்களில் பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் தேர்தல் ஆணையத்தின் கருத்தை கேட்காமல் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கவும் உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

Next Story