அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு:1,368 மாடுபிடி வீரர்கள் பதிவு
அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டுகளுக்காக மொத்தம் 1,368 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்தனர்.
மதுரை,
தைப்பொங்கல் திருநாளையொட்டி மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் 14-ந் தேதியும், பாலமேட்டில் 15-ந் தேதியும், அலங்காநல்லூரில் 16-ந் தேதியும் ஜல்லிக்கட்டு விழா நடைபெற உள்ளது. இதையொட்டி நேற்று அதிகாலையில் இருந்து அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லுரில் மாடுபிடி வீரர்களை பதிவு செய்யும் பணி தொடங்கியது.
இதற்காக நேற்று முன்தினம் நள்ளிரவே முதலே மாடுபிடி வீரர்கள் அங்கு வந்து குவிந்திருந்தனர். இந்த பணி நேற்று மாலை வரை நடந்தது. இதில் பங்கேற்ற மாடுபிடி வீரர்கள் 4 பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் வந்து பதிவு செய்தனர்.
20 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள், எடை 65 கிலோவுக்கு குறைவானவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் உயரம் 5 அடி இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. மாடுபிடி வீரர்களுக்கு காய தழும்புகள், ரத்த அழுத்தம் மற்றும் உடலில் வேறு ஏதும் நோய் அறிகுறிகள் உள்ளதா? என்று மருத்துவ குழுவினர் சோதனை செய்தனர்.
அலங்காநல்லூர், பாலமேட்டில் சேர்த்து, மொத்தம் 1,368 வீரர்கள் நேற்று பதிவு செய்து அதற்கான தகுதி சான்றிதழ் வழங்கப்பட்டன.
இதுதவிர நாளை மற்றும் நாளை மறுநாள் பாலமேட்டிலும், 12, 13-ந் தேதிகளில் அலங்காநல்லூரிலும், மாடுபிடி வீரர்களுக்கு கொரோனா தொற்று உள்ளதா? என பரிசோதனை நடைபெறும். அதன் பின்னர் உரிய அனுமதி அவர்களுக்கு வழங்கப்பட்டு, போட்டியில் கலந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்படும் என அதிகாரிகள், விழாக்குழுவினர் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story