கிராமங்களுக்கும் விலையில்லா இணையதள வசதி தேவை - முதலமைச்சர் பழனிசாமிக்கு சரத்குமார் கோரிக்கை


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 11 Jan 2021 6:58 PM GMT (Updated: 11 Jan 2021 6:58 PM GMT)

கல்லூரி மாணவர்களுக்கு டேட்டா கார்டு வழங்கியதற்கு பாராட்டுக்கள் என்றும் கிராமங்களுக்கும் விலையில்லா இணையதள வசதி தேவை எனவும் முதலமைச்சர் பழனிசாமிக்கு சரத்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை, 

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் கல்வி உதவித்தொகை பெறும் சுயநிதி கல்லூரிகளில் படிக்கும் 9 லட்சத்து 69 ஆயிரத்து 47 மாணவர்களுக்கு பயனளிக்கக்கூடிய வகையில் ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 மாதங்களுக்கு நாளொன்றுக்கு 2 ‘டேட்டா கார்டை' விலையில்லாமல் வழங்கிட தமிழக முதல்-அமைச்சர் உத்தரவிட்டிருப்பதை பாராட்டி வரவேற்கிறேன். 

உயர்கல்வியில் முன்னிலை வகிக்கும் தமிழகத்தில், கொரோனா முடக்கத்தால் மாணவர்களின் கல்வி பாதிக்கக்கூடாது என்ற நல்லெண்ண அடிப்படையில் எடுக்கப்பட்ட தமிழக அரசின் இந்த முடிவை பாராட்டுகிறேன். 

அதேசமயம், நீண்ட காலமாக என் மனதில் மக்கள் நலனுக்காக செயல்படுத்த தூண்டும் திட்டம் ஒன்றை அரசுக்கு கோரிக்கையாக முன்வைக்கிறேன். கிராமத்தின் வளர்ச்சியே, தேசத்தின் வளர்ச்சி. தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் விலையில்லா இணையதள வசதி ஏற்படுத்தி தந்தால், நாடு பெரும் வளர்ச்சியடையும் என்பதை தெரிவித்து அதை பரிசீலிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story